துபையிலிருந்து ரூ.1.20 கோடி மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்: 2 பெண்கள் கைது
துபையிலிருந்து மதுரை வந்த விமானத்தில் ரூ.1.20 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக 2 பெண்களை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
துபையில் இருந்து வெள்ளிக்கிழமை மதுரை வந்த விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவினருக்குத் தகவல் வந்தது. இதையடுத்து மதுரை விமான நிலையத்தில் சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவினர் துபையில் இருந்து வந்த பயணிகளைச் சோதனையிட்டனர்.
அதில் திருச்சியைச் சேர்ந்த பெண் பயணிகள் ஜெயலானி, ஜெயராணி ஆகிய இருவரும் உள்ளாடைக்குள் மெழுகு போன்ற ஒரு பொருளை மறைத்து வைத்துக் கொண்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதனைப் பறிமுதல் செய்து சுங்கத் துறையினர் சோதனையிட்டபோது மெழுகு போன்ற அமைப்பில் தங்கத்தை மறைத்து வைத்துக் கொண்டு வந்தது தெரியவந்தது. அதில் சுமார் 2 கிலோ தங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அதன் மதிப்பு ஒரு கோடியே 19 லட்சத்து 55 ஆயிரத்து 400 ஆகும். இதையடுத்து தங்கத்தைப் பறிமுதல் செய்த சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவினர் பெண்கள் இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.