அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே சூச்சனேரிப்பட்டியில் கண்மாயில் குளித்த இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்தாா். அவரது உடலை வெள்ளிக்கிழமை இரவு மீட்ட காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே சூச்சனேரிப்பட்டி பகுதியில் உள்ள சிறு கண்மாயில் கடந்த சில தினங்களாக பெய்த கன மழை காரணமாக நீர் நிரம்பியுள்ளது.
இந்த நிலையில் நீர் வெளியே வருவதற்காக கால்வாய் வெட்டப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த வெட்டப்பட்ட கால்வாய் ஆழமாக இருந்த நிலையில், ஆழம் தெரியாமல் அக்கண்மாய் கால்வாயில் வெள்ளிக்கிழமை நண்பகலில நண்பர்களுடன் குளிக்கச் சென்ற இளைஞர் வெங்கடேஷ் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
அவருடன் குளிக்கச் சென்ற நண்பர்கள் அளித்த தகவலின் பெயரில் பல மணி நேரத் தேடலுக்குப் பின் வெள்ளிக்கிழமை இரவு உடலை மீட்ட திருச்சுழி காவல் துறையினர் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.