மனைவியை கொலை செய்த கணவர் கைது

மனைவியை அடித்து கொலை செய்த கணவரை நீடாமங்கலம் காவல்துறையினர் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனர்.
நீடாமங்கலம் காவலர்களால் கைது செய்யப்பட்ட மனைவியை கொலை செய்த கணவர் அம்சகர்ணன்.
நீடாமங்கலம் காவலர்களால் கைது செய்யப்பட்ட மனைவியை கொலை செய்த கணவர் அம்சகர்ணன்.


நீடாமங்கலம்: மனைவியை அடித்து கொலை செய்த கணவரை நீடாமங்கலம் காவல்துறையினர் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனர்.

நீடாமங்கலத்திலிருந்து திருவாரூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ஒளிமதி கிராமம் அருகில் உள்ள கற்கோவில் என்ற இடத்தில் வெண்ணாறு படுகையில் கடந்த16 ஆம் தேதி 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வெள்ளை சாக்கு பையில் கட்டியபடி பிணமாக கிடந்தார்.

இதுகுறித்த தகவல் காவல்துறையினருக்கு தெரிவிக்கப்பட்டது. தகவலை அடுத்து திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துரை,மன்னார்குடி காவல் துணை கண்காணிப்பாளர் இளஞ்செழியன் மற்றும் நீடாமங்கலம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்தனர்.

ஆற்றில் கிடந்த பெண்ணின் சடலத்தை கரைக்கு தூக்கி பார்த்ததில் கண் மற்றும் வாயில் மீன் கடித்த புண்ணும், கழுத்தில் கயிற்றால் இருக்கியும், நெற்றி பகுதியில் காயமும் இருந்தது தெரிய வந்தது. மேலும் அந்த பெண்ணின் மூக்கில் மூக்குத்தி, தோடு, கழுத்தில் சிறிய மற்றும் பெரிய செயின்கள், காலில் கொலுசுடன் கை,கால்கள் கட்டப்பட்டிருந்தது. மர்ம நபர்கள் பெண்ணை கொன்று வெள்ளை நிற சாக்கு பையில் கட்டி ஆற்றில் வீசியுள்ளனர் என்பதும் தெரியவந்தது.

உடனடியாக நீடாமங்கலம் காவலர்கள் பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த நீடாமங்கலம் காவலர்கள், கொலை செய்யப்பட்ட பெண் யார்? அவர் எந்த ஊரைச்சேர்ந்தவர்? வெளியூரில் கொலை செய்து ஆற்றில் எரிந்தார்களா? கொலை செய்து கொண்டு வந்து போட்டு சென்றார்களா? உள்ளிட்ட பல கோணங்களில் விசாரனை மேற்கொண்டனர்.

காவலர்களின் தீவிர விசாரணையில் கொலை செய்யப்பட்டு ஆற்றில் வீசப்பட்ட பெண் மன்னார்குடியைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. மன்னார்குடி மதுக்கூர் ரோடு மணிகண்டன் நகர் ராஜேந்திரன் மகன் அம்சகர்ணன்(46) என்பவரது மனைவி சுதா(37) என்பது தெரியவந்தது.

இவர்களுக்கு ஒரு மகனும்,ஒரு மகளும் உள்ளனர். காவலர்கள் தொடர்ந்து நடத்திய விசாரணையில் அம்சகர்ணனுக்கு இரண்டு மனைவிகள் என்பதும் அதில் முதல் மனைவி சுதாதான் கொலை செய்யப்பட்டவர் என்பதும் தெரிந்தது. உடனடியாக காவலர்கள் அம்சகர்ணனை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் தனக்கு இரண்டு மனைவிகள் என்பதையும் முதல் மனைவி சுதாவின் நடத்தை சரியில்லாததால் பலமுறை கண்டித்தும் திருந்தாத நிலையில் கை,காலை கட்டி காரில் அழைத்துக்கொண்டு சுதாவின் பெற்றோர் வீட்டில் கொண்டுபோய் விட தண்ணீர்குன்னம் அழைத்துச்சென்ற போது சுதா வாய்த்தகராறில் ஈடுபட்டதால் காரில் இருந்த இரும்பு கம்பியால் தலையில் அடித்ததாகவும் தலையில் ரத்தம் வந்ததாகவும்,மேலும் தாக்கிய போது அவர் இறந்து போனதாவும் கூறினார்.

மேலும் இறந்த சுதாவின் உடலை காரில் வைத்தபடி பல இடங்களுக்கும் சென்று பின்னர் நீடாமங்கலம் அருகே கற்கோயில் பகுதியில் வெண்ணாற்றில் உடலை வீசியதையும் ஒப்புக்கொண்டார்.

அம்சகர்ணனின் 2-வது மனைவி சத்யா(30) என்பதும் இவருக்கு ஒரு பெண் குழந்தை இருப்பதையும் அம்சகர்ணன் ஒப்புக்கொண்டார்.

இதனையடுத்து நீடாமங்கலம் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து சுதாவை கொலை செய்த அவரது கணவர் அம்சகர்ணனை வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com