சென்னை: பலாத்கார வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு, கடந்த 7 ஆண்டு காலமாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, குற்றமற்றவர் என்று தெரிய வந்த இளைஞருக்கு ரூ.15 லட்சம் இழப்பீடு வழங்க சென்னை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஏழு ஆண்டுகளுக்கு முன்பு, கல்லூரி மாணவராக இருந்த இளைஞர் மீது, ஒரு பெண்ணும், அவரது பெற்றோரும் அளித்த தவறான குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உள்ளானார்.
திருமணம் செய்வதாக ஏமாற்ற பெண்ணை பலாத்காரம் செய்து, கர்ப்பிணியாக்கியதாக புகார் கூறப்பட்டது.
இந்த நிலையில், குற்றம்சாட்டிய பெண்ணுக்குப் பிறந்த குழந்தைக்கு நடத்தப்பட்ட மரபணு சோதனையில், அந்த குழந்தை, குற்றம்சாட்டப்பட்ட இளைஞருக்குப் பிறக்கவில்லை என்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, இளைஞர் குற்றமற்றவர் என்று தீர்ப்பளித்து வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்.
இதையடுத்து, தவறுதலாக பலாத்கார வழக்குப் பதிவு செய்து தனது வாழ்க்கை மற்றும் வேலை வாய்ப்பை இழக்கக் காரணமாக இருந்த காரணத்தால், பெண்ணின் குடும்பத்தாரிடம் இழப்பீடு கேட்டு வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை நீதிமன்றம், பொய்யான புகார் அளித்த பெண் மற்றும் அவரது பெற்றோர் சார்பில், இளைஞருக்கு ரூ.15 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளது.
2009-ஆம் ஆண்டு பெண்ணின் வீட்டார் தரப்பில் பொய்ப் புகார் அளிக்கப்பட்டு, கைது செய்யப்பட்ட இளைஞர், பிணையில் விடுதலையாகி வெளியே வந்தார். தொடர்ந்து 7 ஆண்டுகள் விசாரணை நடைபெற்று, இளைஞர் குற்றமற்றவர் என்று 2016-ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கப்பட்டது.
இதையடுத்து இளைஞர் தொடர்ந்த வழக்கில், இந்த வழக்குக்காக மட்டும் தான் ரூ.2 லட்சத்துக்கு மேல் செலவு செய்ததாகவும், படிப்பும் வீணாகி, அலுவலக உதவியாளராக குறைந்த சம்பளத்தில் வேலை செய்து வருவதாகவும் தனக்கு நேரிட்ட அவல நிலை குறித்து விவரித்துள்ளார்.