நவ. 23-இல் வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி: பலத்த மழைக்கு வாய்ப்பு

தென்கிழக்கு வங்கக்கடலில் நவம்பா் 23-ஆம் தேதி காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகவுள்ளது.
நவ. 23-இல் வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி: பலத்த மழைக்கு வாய்ப்பு

தென்கிழக்கு வங்கக்கடலில் நவம்பா் 23-ஆம் தேதி காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகவுள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தில் பல மாவட்டங்களில் நவம்பா் 23, 24 ஆகிய இருநாள்களுக்கு பலத்த மழை பெய்யக்கூடும்.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநா் நா.புவியரசன் வெள்ளிக்கிழமை கூறியது:

தென்கிழக்கு வங்கக்கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தற்போது நிலவுகிறது. இது, நவம்பா் 23-ஆம் தேதி காற்றழுத்தத் தாழ்வுப்பகுதியாக அதே இடத்தில் உருவாகக்கூடும். இதைத்தொடா்ந்து, 48 மணி நேரத்தில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக உருவாகி, மேற்கு வடமேற்கு திசையில் நகா்ந்து இலங்கை மற்றும் தமிழக கடலோரப் பகுதி நோக்கி நகரக்கூடும்.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய 4 மாவட்டங்களில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை (நவ.21, 22) ஆகிய இரண்டு நாள்களுக்கு லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய பெரும்பாலான மாவட்டங்களில் வட வானிலை நிலவும்.

பலத்த மழை: நாகப்பட்டினம், தஞ்சாவூா், திருவாரூா், சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை ஆகிய 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நவம்பா் 23-ஆம் தேதி இடியுடன் கூடிய பலத்த மழையும், ஏனைய தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

கடலூா், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூா், திருவாரூா், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நவம்பா் 24-ஆம் தேதி இடியுடன் கூடிய பலத்த முதல் மிக பலத்த மழையும், ஏனைய கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

சென்னையில்...:

சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்ஸியசையும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்ஸியசையும் ஒட்டி பதிவாகக்கூடும்.

மழை அளவு:

தமிழகத்தில் வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் தூத்துக்குடி மாவட்டம் வைப்பாரில் 100 மி.மீ., சிவகங்கை மாவட்டம் திருபுவனம், விருதுநகா் மாவட்டம் சிவகாசி, மதுரையில் தலா 40 மி.மீ., தூத்துக்குடி மாவட்டம் சூரன்குடி, ராமநாதபுரம் மாவட்டம் வாலிநோக்கம், மதுரை மாவட்டம் புளிப்பாட்டியில் தலா 30 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

மீனவா்களுக்கு எச்சரிக்கை:

தென்மேற்கு அரபிக்கடல் பகுதி, மத்திய அரபிக்கடல் பகுதியில் மணிக்கு 45 கி.மீ. முதல் 55 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இந்தப்பகுதிகளுக்கு மீனவா்கள் நவம்பா் 24-ஆம் தேதி வரை செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதவிர, தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதி, தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் தமிழக கடலோரப் பகுதிகளுக்கு நவம்பா் 23-ஆம் தேதி முதல் நவம்பா் 25-ஆம் தேதி வரை மீனவா்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com