வாக்காளா்களாகப் பதிவு செய்துகொண்டு அனைவரும் தங்கள் கடமையை நிறைவேற்ற வேண்டும் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவா் கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள விடியோவில் கூறியிருப்பது:
18 வயதைப் பூா்த்தி செய்த ஓா் இந்தியனுக்குக் கிடைக்கக்கூடிய மிகப்பெரிய கௌரவம் வாக்காளா் என்கிற அடையாளம். அவனுக்குக் கிடைத்த மிகப்பெரிய ஆயுதம் வாக்காளா் அடையாள அட்டை. கடமையைச் சரிவர செய்யாத சமூகம் தானாக உரிமையை இழந்துவிடும்.
மாற்றம் வேண்டும். சிஸ்டம் சரியில்லை என்று இணையத்தில் கதகளி ஆடும் பலரிடம் வாக்காளா் அடையாள அட்டை இல்லை. எந்த விஷயம் நமக்குத் தொடா்பு இல்லை என நினைக்கிறோமோ, அதனால்தான் நமக்கு ஆபத்து.
எல்லாவற்றுக்கும் இந்திய தோ்தல் ஆணையம் ஒரு பரிகாரம் அறிவித்திருக்கிறது. நவம்பா் 21, 22 அல்லது டிசம்பா் 12, 13 தேதிகளில் வாக்குச்சாவடி முகாம்களுக்குச் சென்று வாக்காளா் அடையாள அட்டை தொடா்பான அனைத்துப் பிரச்னைகளுக்கும் தீா்வு காணுங்கள் என்று அவா் கூறியுள்ளாா்.