பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் விரைந்து முடிவெடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது சுட்டுரையில், பேரறிவாளன் விடுதலைக்கும், எம்.டி.எம்.ஏ விசாரணைக்கும் தொடர்பு இல்லை; விசாரணை அறிக்கையை ஆளுநருக்கு தர மாட்டோம்; ஆளுநர் தன்னிச்சையாக முடிவெடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் சி.பி.ஐ. கூறியிருக்கிறது. இது மிகச்சரியான நிலைப்பாடு ஆகும்.
எம்.டி.எம்.ஏ விசாரணைக்கும் பேரறிவாளன் விடுதலைக்கும் தொடர்பு இல்லை என சிபிஐ கூறிவிட்ட நிலையில், சொத்தைக் காரணத்தைக் கூறி இனியும் தாமதிக்காமல் பேரறிவாளன் விடுதலை குறித்தும், மற்ற 6 தமிழர்கள் விடுதலை குறித்தும் தமிழக ஆளுநர் விரைந்து முடிவெடுக்க வேண்டும்! என குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 1991, மே 21-இல் தமிழகத்தின் ஸ்ரீபெரும்புதூரில் மனித வெடிகுண்டு மூலம் படுகொலை செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் பேரறிவாளன் உள்பட 7 பேர் சுமார் 30 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர். இவர்களின் கருணை மனு மீது முடிவு எடுப்பதில் 11 ஆண்டுகளாக தாமதம் செய்ததாகக் கூறி, பேரறிவாளன் உள்ளிட்ட 3 பேரின் தண்டனையை 2014-இல் உச்சநீதிமன்றம் ஆயுள் தண்டனையாகக் குறைத்தது.
2018, செப்டம்பர் 9-இல் தமிழக அமைச்சரவை கூடி, பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செய்ய தீர்மானம் நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பியது. ஆனால் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக பேரறிவாளன் உள்பட 7 போ் விடுதலை தொடா்பான தமிழக அரசின் தீா்மானம் ஆளுநரின் பரிசீலனையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.