திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இன்று 3 ஆவது நாளாக மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு 'விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்' என்ற தேர்தல் பிரசாரப் பரப்புரை பயணத்தை திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மேற்கொண்டு வருகிறார்.
நாகை மாவட்டம் திருக்குவளையில் தனது பிரச்சாரத்தை மேற்கொண்டபோது ஊரடங்கு விதிமுறைகளை பின்பற்றாமல் கூட்டம் கூட்டியதற்காக கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டார். தொடர்ந்து இரண்டாவது நாளாகவும் நாகையில் கைது செய்யப்பட்டார். இரவு விடுவிக்கப்பட்டார்.
இதையடுத்து சனிக்கிழமை இரவு மயிலாடுதுறையில் மாணவ, மாணவிகளை சந்தித்து கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். மூன்றாவது நாளாக இன்று திருவெண்காட்டில் நிகழ்ச்சியை தொடங்கியவர் மதியம் குத்தாலம் கடைவீதியில் பரப்புரை மேற்கொள்ள இருந்த நிலையில் தஞ்சை சரக டிஐஜி ரூபேஷ்குமார் மீனா தலைமையில் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். வஜ்ரா வாகனத்தில் குத்தாலத்திற்கு வந்த காவல்துறையினர், பிரசாரத்தில் இருந்த உதயநிதி ஸ்டாலினை கைது செய்தனர்.