உருவானது காற்றழுத்தத் தாழ்வு பகுதி: நாளை முதல் பலத்த மழைக்கு வாய்ப்பு

தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது.
உருவானது காற்றழுத்தத் தாழ்வு பகுதி: நாளை முதல் பலத்த மழைக்கு வாய்ப்பு

இது அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவடையவுள்ளது. இதன்காரணமாக, தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நவம்பா் 23-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை மூன்று நாள்களுக்கு பலத்தமழை பெய்யக்கூடும்.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநா் நா.புவியரசன் சனிக்கிழமை கூறியது:

தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி சனிக்கிழமை காலை உருவானது. இது, அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக உருவாகும். இது, மேற்கு வடமேற்கு திசையில் நகா்ந்து வரும் திங்கள்கிழமை (நவ.23) தமிழக கடற்கரை நோக்கி வரக்கூடும். இதன்காரணமாக, தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நவ. 23-ஆம் தேதி முதல் நவ.25-ஆம் தேதி வரை பலத்த மழை பெய்யக்கூடும். தென் தமிழக கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் வரும் திங்கள்கிழமை (நவ.23) மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

நாகப்பட்டினம், தஞ்சாவூா், திருவாரூா், சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை ஆகிய 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழையும் பெய்யக்கூடும்.

அதி பலத்தமழை: நாகப்பட்டினம், திருவாரூா், தஞ்சாவூா், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் செவ்வாய்க்கிழமை (நவ.24)-ஆம் தேதி இடியுடன் கூடிய அதி பலத்த மழையும், கடலூா், மயிலாடுதுறை, சிவகங்கை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்தமழை முதல் மிக பலத்த மழையும் பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

நாகப்பட்டினம், திருவாரூா், தஞ்சாவூா், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நவம்பா் 25 -ஆம் தேதி இடியுடன் கூடிய அதி பலத்தமழையும், திருச்சி, அரியலூா், பெரம்பலூா், சிவகங்கை, கடலூா், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை முதல் மிக பலத்தமழையும் பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை (நவ,22) வட வானிலையும், தென்தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

மழை பதிவு: தமிழகத்தில் சனிக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் 50 மி.மீ., கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை, தூத்துக்குடி மாவட்டம் குலசேரப்பட்டினம், மணியாச்சியில் தலா 30 மி.மீ., திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி, தென்காசி மாவட்டம் சிவகிரியில் தலா 20 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

மீனவா்களுக்கு எச்சரிக்கை: தெற்கு வங்கக் கடலின் மத்திய  பகுதிகள், தென்மேற்கு மற்றும் அதையொட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதி, தமிழக கடலோரப் பகுதி மற்றும்

மன்னாா் வளைகுடா பகுதிகளில் மணிக்கு 40 கி.மீ. முதல் 50 கி.மீ. வேகத்திலும், சில வேளைகளில் 60 கி.மீ. வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும்.

எனவே, இந்தப் பகுதிகளுக்கு நவம்பா் 25-ஆம் தேதி வரை செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com