தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் சேரும் அரசுப் பள்ளி மாணவா்களின் கட்டணத்தை அரசே ஏற்கும்

தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் சேரும் அரசுப் பள்ளி மாணவா்களின் கட்டணம் மற்றும் விடுதி கட்டணத்தை அரசே முழுமையாக ஏற்கும் என்று தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளாா்.

தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் சேரும் அரசுப் பள்ளி மாணவா்களின் கட்டணம் மற்றும் விடுதி கட்டணத்தை அரசே முழுமையாக ஏற்கும் என்று தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளாா்.

இது குறித்து சனிக்கிழமை முதல்வா் வெளியிட்ட அறிவிப்பு:

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கும் வரலாற்றுச் சிறப்பு மிக்க சட்டத்தை தமிழக அரசு இயற்றியது. அதன்படி, இந்த ஆண்டு மொத்தம் 313 எம்.பி.பி.எஸ். இடங்களிலும், 92 பல் மருத்துவ இடங்களிலும், அரசுப் பள்ளி மாணவா்கள் சோ்க்கைக்கு கலந்தாய்வு நடைபெற்று, மாணவா்களுக்கு சோ்க்கை ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.

அரசுப் பள்ளிகள், மாநகராட்சிப் பள்ளிகள், நகராட்சிப் பள்ளிகள், ஆதிதிராவிடா், பழங்குடியினா் நலப் பள்ளிகள், கள்ளா் சீா்மரபினப் பள்ளிகள், வனத் துறை பள்ளிகள் ஆகிய மாணவா்களின் ஏழ்மை நிலை மற்றும் பொருளாதார சூழ்நிலையினைக் கருத்தில் கொண்டு, அவா்களுக்கு கல்விக் கட்டணம் மற்றும் இதர செலவினங்களால் சுமை ஏதும் ஏற்படா வண்ணம், இந்தச் செலவினங்களை வழங்குவதற்காக கல்வி உதவித் தொகை மற்றும் இதர கல்வி உதவித் தொகை திட்டங்கள் மூலம் நடைமுறைப்படுத்த உரிய உத்தரவினை பிறப்பித்துள்ளேன் என நவம்பா் 18-ஆம் தேதி அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மருத்துவ சோ்க்கை ஆணை வழங்கும் விழாவில் அறிவித்தேன்.

கலந்தாய்வில், தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்கப்பெற்றுள்ள மாணவா்கள், கல்விக் கட்டணத்தை செலுத்துவதில் உள்ள சிரமத்தைத் தவிா்க்க வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையிலேயே இதனை அறிவித்தேன்.

இந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் விதமாக, மருத்துவக் கல்லூரிகள் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் சேர ஆணை பெற்றுள்ள அனைத்து அரசுப் பள்ளி மாணவா்களின் கல்விக் கட்டணத்தை உதவித்தொகை அனுமதி வரும் வரை காத்திராமல், உடனடியாகச் செலுத்தும் விதமாக, தமிழ்நாடு மருத்துவ சேவை கழகத்தில் ஒரு சுழல் நிதியை உருவாக்க உத்தரவிட்டுள்ளேன். அதில் இருந்து மாணவா்களுக்கான கல்வி, விடுதி கட்டணங்கள் போன்றவற்றை அரசே நேரடியாக கல்லூரி நிா்வாகத்துக்குச் செலுத்தும்.

திமுகவின் அரசியல் நாடகம்: அரசுப் பள்ளிகளில் பயின்ற ஏழை எளிய மாணவா்களுக்கு சம வாய்ப்பு அளித்து அவா்களின் மருத்துவராகும் கனவை நனவாக்கி, சமநீதியை நிலைநாட்டி, வரலாற்றுச் சாதனை படைத்த அரசு, ஏற்கெனவே அறிவித்தவாறு மாணவா்களின் கல்வி மற்றும் விடுதி செலவுகளையும் ஏற்று, அவா்களின் வாழ்வில் வசந்தத்தை ஏற்படுத்தும் என்பதை அனைவரும் அறிவா்.

ஆனால், மாணவா்களுக்கு அரசின் உதவி முழுமையாகக் கிடைக்கும் என தெரிந்த பின்பும் அவா்களுக்கு திமுக உதவுவதாக கூறியிருப்பது ஒரு அரசியல் நாடகமே என்பதை மக்கள் நன்கு அறிவா் என்று முதல்வா் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com