பாட்டாளிகளுக்காக தொடர்ந்து குரல் கொடுப்போம்: ஆர்.நல்லகண்ணு

பாட்டாளி வர்க்கத்திற்காக தொடர்ந்து குரல் கொடுக்கும் இயக்கமாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் திகழ்ந்து வருகிறது என்றார் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு.
பாட்டாளிகளுக்காக தொடர்ந்து குரல் கொடுப்போம்: ஆர்.நல்லகண்ணு


திருநெல்வேலி: பாட்டாளி வர்க்கத்திற்காக தொடர்ந்து குரல் கொடுக்கும் இயக்கமாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் திகழ்ந்து வருகிறது என்றார் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு.

திருநெல்வேலி சந்திப்பு சிந்துபூந்துறையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருநெல்வேலி மாவட்டக்குழு சார்பில் கட்டப்பட்டுள்ள பாலன் இல்லத்தை ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்த பின்பு செய்தியாளர்களிடம் அவர் கூறியது: மிகப்பெரும் பாரம்பரியம் மிகுந்த கட்சிகளில் ஒன்றாக இந்திய கம்யூனிஸ்ட் திகழ்கிறது. நாட்டின் விடுதலைக்காக போராடிய பலர் இந்த இயக்கத்தில் இணைந்தனர். தேசியம், திராவிடம் பாதுகாக்கப்பட முன்னணியில் நிற்பதோடு, பாட்டாளி வர்க்கத்தினருக்காகவும் தொடர்ந்து குரல் கொடுக்கும் இயக்கமாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திகழும் என்றார் அவர்.

வரம்பு மீறிய செயல்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் இரா.முத்தரசன் கூறியது: சென்னையில் அரசுக்கு சொந்தமான கலைவாணர் அரங்கில் நடைபெற்ற மத்திய அரசின் திட்டங்கள் தொடக்க விழாவின்போது அரசு திட்டங்கள் குறித்து பேசுவதற்கு பதிலாக அதிமுக-பாஜக கூட்டணிகுறித்து பேசியிருக்கிறார்கள். முதல்வர், துணை முதல்வர், மத்திய உள்துறை அமைச்சர் ஆகியோர் மரபு மீறி அரசு நிகழ்ச்சிகளை பயன்படுத்துகிறார்கள். எங்கள் கட்சி சார்பிலும் கலைவாணர் அரங்கத்தில் கூட்டம் நடத்த அனுமதி கேட்போம். எங்களுக்கு அனுமதி மறுக்கும் பட்சத்தில் நாங்கள் கடுமையான போராட்டத்தை முன்னெடுப்போம். 

அதிமுக-பாஜக படுதோல்வி: தேர்தல் ஆணையம் அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு கட்டுப்பட்டது. தன்னிச்சையாக சுதந்திரமாக செயல்பட வேண்டியது அவசியம்.  ஆனால், இப்போது பாஜகவுக்கு கட்டுப்பட்டதைப் போன்று தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் உள்ளன.  பிகார் மாநிலத்தில் செய்ததைப் போல தேர்தல் முறைகேடுகளை தமிழகத்திலும் செய்ய திட்டமிடுகிறார்கள்.

முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குகள் முறைக்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் ஆட்சேபம் தெரிவித்து வரும் சூழலில், அத்தகைய தபால் வாக்குகளை அதிகாரிகளே நேரடியாகச் சென்று பெறலாம் என்பது தொடர்பாக சுற்றறிக்கையை தேர்தல் ஆணையம் அனுப்பியிருப்பது கண்டிக்கத்தக்கது. இது, வாக்காளர்களின் ஜனநாயக உரிமையைப் பறிக்கும் செயலாகும். அந்தச் சுற்றறிக்கையை இந்திய தேர்தல் ஆணையம் திரும்பப் பெற வேண்டும்.

திருக்குவளை மற்றும் நாகப்பட்டினத்தில் உதயநிதி ஸ்டாலின் பிரசாரத்திற்கு சென்ற போது கைது செய்யப்பட்டு உள்ளார். இதற்கு கண்டனத்தைத் தெரிவிப்பதோடு, திமுகவினர் மீது போடப்பட்ட வழக்குகளையும் திரும்பப்பெற வேண்டும்.

அதிமுக-பாஜக கூட்டணி கடந்த மக்களவைத் தேர்தலின்போது தோல்வியைச் சந்தித்தது போல, வரும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் படுதோல்வியைச் சந்திக்கும்.  மீண்டும் அதிமுக பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்பது முதல்வரின் கனவாக இருக்கலாம். முதல்வர் கனவு காணுவதற்கு உரிமை உள்ளது அதனை கலைக்க விரும்பவில்லை என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com