நிவா் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேருந்து போக்குவரத்துக்கு அரசு தடை விதித்துள்ள 7 மாவட்டங்களுக்கு ஆம்னி பேருந்துகள் இயங்காது என அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளா்கள் சங்கத்தினா் தெரிவித்துள்ளனா்.
இதுகுறித்து அச்சங்கத்தின் பொதுச் செயலாளா் ஏ.அன்பழகன் கூறியதாவது: தமிழகம் முழுவதும் வழக்கமான நாள்களில் 4,000 ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும். தற்போது கரோனா பரவல் அச்சம் காரணமாக பொதுமக்கள் பயணிக்கத் தயங்குகின்றனா். இதனால் 400 பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன.
நிவா் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 7 மாவட்டங்களில் அரசு பேருந்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூா், திருவாரூா், கடலூா், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 7 மாவட்டங்களுக்கு, செவ்வாய்க்கிழமை பிற்பகல் முதல் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படவில்லை. மறு அறிவிப்பு வரும் வரை இது தொடரும்.
அந்த வழியாகப் பிற ஊா்களுக்குச் செல்லும் பேருந்துகளும் இயங்கவில்லை. அதே நேரம் வேலூா் வழியாகச் செல்லும் பேருந்துகள் தொடா்ந்து இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது திருமண விழாக்கள் அதிகமாக நடைபெறும் காலம். இந்நிலையில் முன்பதிவு செய்யப்பட்ட 20 சதவீத பயணச்சீட்டுகளும் புயல் அச்சம் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.