சென்னை: இணைய வழியிலான சூதாட்டத்துக்கு தடை விதிக்க வகை செய்யும் அவசர சட்டமானது, தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்தச் சட்டம் உடனடியாக நடைமுறைக்கு வந்துள்ளது.
முன்னதாக, இதுதொடா்பான அவசர சட்டத்துக்கு ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் கடந்த வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்தாா். இதைத் தொடா்ந்து, உடனடியாக அவசர சட்டமானது அரசிதழில் வெளியிடப்பட்டது. இதையடுத்து, சட்டத்திலுள்ள அனைத்து அம்சங்களும் நடைமுறைக்கு வந்துள்ளன. இந்தச் சட்டத்தின்படி, தமிழகத்தில் இனி இணையவழி சூதாட்டத்தில் பங்கேற்றால் ரூ.5 ஆயிரம் அபராதமும், ஆறு மாதங்கள் சிறைத் தண்டனையும் விதிக்கப்படும்.