சங்ககிரி: சேலம் மாவட்டம், சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட தேவண்ணகவுண்டனூர் ஊராட்சி, செட்டிக்காட்டில் நபார்டு திட்டத்தின் கீழ் புதிய கால்நடை மருத்துவமனை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.
தேவண்ணகவுண்டனூர் ஊராட்சிக்குள்பட்ட செட்டிகாட்டில் 'நபார்டு' திட்டத்தின் கீழ் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கால்நடை மருத்துவமனை கட்டுவதற்கான பணிகளை சங்ககிரி சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.ராஜா தலைமை வகித்து அடிக்கல் நாட்டி பூமி பூஜை செய்து தொடக்கி வைத்தார்.
சங்ககிரி கால்நடை மருத்துவ உதவி இயக்குனர் முத்துக்குமார் வரவேற்றார். அதிமுக சேலம் புறநகர் மாவட்ட மாநில பொதுக்குழு உறுப்பினர் கே.வெங்கடாஜலம், கிழக்கு ஒன்றியச் செயலர் என்.சி.ஆர். ரத்தினம், துணைச் செயலர் மருதாசலம், சங்ககிரி ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர் ஏ.பி.சிவக்குமாரன், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் சுமதி, கால்நடை மருத்துவர் சுகவனம் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.