சென்னை: தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியிருக்கும் தீவிர நிவர் புயல் காரணமாக, தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் காலை முதலே பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
இதையும் படிக்கலாமே.. சென்னை உள்பட 13 மாவட்டங்களுக்கு நாளை பொதுவிடுமுறை: முதல்வர் பழனிசாமி
பலத்த காற்றுடன் கனமழை கொட்டி வருவதால், சென்னை அண்ணாசாலையில் அமைந்துள்ள ஹஸ்ரத் சையது மூஸா ஷா காதரி தர்காவின் மேற்கூரை சரிந்து விழுந்து சேதமடைந்தது. சென்னையின் மிக முக்கியப் பகுதியில் அமைந்துள்ள இந்த தர்காவில் வழக்கமாக மக்கள் கூட்டம் அதிகம் காணப்படுவது வழக்கம். ஆனால் கனமழை காரணமாக இன்று கூட்டம் குறைவாகவே இருந்ததால், யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலை முதலே சென்னையில் பரவலாக பலத்த காற்று வீசி வருவதாலும், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதாலும், தாழ்வான பகுதிகளில் இருக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, இன்று தமிழகம் முழுவதும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், 13 மாவட்டங்களில் நாளையும் பொது விடுமுறை அறிவித்துள்ளார் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி.