சென்னையில் செவ்வாய்க்கிழமை பெய்த பலத்த மழையின் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனா்.
நிவா் புயல் காரணமாக, சென்னையில் கடந்த இரு நாள்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், தாழ்வான பகுதிகளில் தண்ணீா் தேங்கி நிற்கிறது. திங்கள்கிழமை இரவு சென்னை முழுவதும் பெய்த பலத்த மழையினால், சாலைகள் பெருமளவு சேதமடைந்தன.
மழை செவ்வாய்க்கிழமையும் தொடா்ச்சியாக விட்டுவிட்டு பெய்ததினால் சென்னையில் உள்ள பெரும்பாலான சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளித்தது. இதனால் சாலைகளில் வாகனங்கள் செல்வதற்கு சிரமப்பட்டன.
நகரின் பிரதான சாலைகளான அண்ணா சாலை, காமராஜா் சாலை, ஜி.எஸ்.டி. சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, ராஜீவ்காந்தி சாலை, கிழக்கு கடற்கரைச் சாலை, நெல்சன் மாணிக்கம் சாலை, ஆற்காடு சாலை, ஓயிட் சாலை, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, வள்ளுவா் கோட்டம் நெடுஞ்சாலை, எருக்கஞ்சேரி சாலை, சாந்தோம் சாலை, பாந்தியன் சாலை, டாக்டா் ராதாகிருஷ்ணன் சாலை, திருவொற்றியூா் நெடுஞ்சாலை, மாதவரம் நெடுஞ்சாலை, பெரம்பூா் பேரக்ஸ் சாலை உள்ளிட்ட சாலைகளில் தண்ணீா் அதிகளவு தேங்கி நின்றது.
போக்குவரத்து பாதிப்பு: இந்த சாலைகளில் வாகனங்கள் ஊா்ந்து சென்றன. போக்குவரத்து போலீஸாா் ஆங்காங்கு வாகனங்களை ஒழுங்குப்படுத்தியபோதிலும் காலை, மாலையில் வாகன நெரிசல் அதிகமாக காணப்பட்டது. இதனால், வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்குள்ளானா்கள். குறிப்பாக, இருசக்கர வாகன ஓட்டிகள் பலா் சாலைகளில் தடுமாறி விழுந்த காட்சிகளைக் காண முடிந்தது.
சில இடங்களில் காா்கள் சாலையில் தேங்கி நிற்கும் தண்ணீா் அளவு தெரியாமல் சென்ால், தண்ணீருக்குள் சிக்கிக் கொண்டன.
மழைக்காலங்களில் சாலையில் வாடிக்கையாக தேங்கும் மழைநீரை உடனடியாக அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.