பொங்கல் பண்டிகைக்கு, உச்ச நீதிமன்றத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருப்பதை வரவேற்பதாக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
2021-ஆம் ஆண்டுக்கான உச்ச நீதிமன்றம் விடுமுறை நாள்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் முதல் முறையாகத் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகைக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற வரலாற்றிலேயே பொங்கலுக்கு விடுமுறை அளிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும். இதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது சுட்டுரையில், தமிழர்களின் பாரம்பரிய விழாவான பொங்கல் திருநாளன்று உச்சநீதிமன்றத்திற்கு விடுமுறை அளித்து, தைத்திருநாளின் சிறப்பினை தேசமறியச் செய்த வரலாற்று சிறப்புமிக்க முடிவை மகிழ்ச்சியோடு வரவேற்பதுடன், உச்சநீதிமன்றத்திற்கு உலகத் தமிழர்களின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.