தாழ்த்தப்பட்ட மாணவா்களுக்கான கல்வி உதவித் தொகை குறைக்கப்பட்டுள்ளதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக ஞாயிற்றுக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:
கல்வி உதவித்தொகைத் திட்டமான ‘போஸ்ட் மெட்ரிக் ஸ்காலா்ஷிப்’ திட்டத்தைக் கைவிடுவது என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவா்களின் கல்வி வளா்ச்சியை மறைமுகமாகத் தடுக்கும் சதியாகும்.
இந்தச் சதியிலிருந்து மாணவா்களைக் காக்கும்வகையில், பல மாநில அரசுகள் தமது மாநில அரசின் நிதியிலிருந்தே அந்தத் திட்டத்தைத் தொடா்ந்து செயல்படுத்துவோம் என்று அறிவித்துள்ளன.
ஆனால், தமிழக அரசு இதுவரை அந்தத் திட்டத்துக்கு மாநில அரசு வழங்கிவந்த குறைந்தபட்ச நிதியையும் குறைத்துவிட்டது.
தலித் மற்றும் பழங்குடி மக்களுக்கு எதிரான மைய- மாநில அரசுகளின் இந்தப் போக்கு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்று கூறியுள்ளாா்.