அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் காந்தி ஜெயந்திவிழாவை முன்னிட்டு ரஜினி மக்கள் மன்றம் மற்றும் இளைஞரணி சார்பில் பாரம்பரிய நடனக்கலை நிகழ்ச்சிகளுடன் பள்ளி, கல்லூரி மாணவ,மாணவியர்க்கான சிறப்பு ஓவியப் போட்டி பரிசளிப்புவிழா வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.
அருப்புக்கோட்டை டெலிபோன் சாலையில் உள்ள வர்த்தகர் சங்கக் கட்டடத்தில் நடைபெற்ற காந்திஜெயந்திவிழா நிகழ்ச்சிக்கு நகர ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி கே.எம்.பி.சி.சுரேஷ், மற்றும் விருதுநகர் மாவட்டச் செயலாளர் முருகன் ஆகியோர் தலைமை வகித்தனர்.நகர நிர்வாகிகள் ஜி.கண்ணன்,ஆர்.ரவி, கே.எம்.சாகுல் ஹமீது, கே.கோச்சடை ஆகியோர் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளும் இணைந்து மகாத்மா காந்தி உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்தும், மலர்கள் தூவியும் வணங்கினர்.
அதனைத்தொடர்ந்து நடன ஆசிரியர் ஜெயக்குமார் மற்றும் பள்ளிமாணவியர் இணைந்து பாரம்பரிய நடனக் கலை நிகழச்சிகளை வழங்கினர்.
முன்னதாக மன்றத்தினர் சார்பில் இணையதள முறையில் நடைபெற்ற ஓவியப்போட்டிகளில் வென்ற பள்ளி,கல்லூரிமாணவ,மாணவியர்க்கு பரிசிளப்பு விழா நடைபெற்றது.
அப்போது மாவட்ட நிர்வாகி முருகன் பரிசுகளை வழங்கிப் பாராட்டினார்.அருப்புக்கோட்டை நல்ல உள்ளம் டிரஸ்ட் அமைப்பினர், பாரதி இளைஞர் நற்பணி மன்றத்தினர் மற்றும் ரஜினி மக்கள் மன்ற தகவல் தொடர்பு மற்றும் இணையதள பொறுப்பாளர் கார்த்திக் ஆகியோர் இணைந்து நிகழ்ச்சி ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.