காரைக்கால் : புதுச்சேரியில் மருத்துவர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, காரைக்காலில் மருத்துவர், செவிலியர் உள்ளிட்ட ஊழியர்கள் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
புதுச்சேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட பக்கிரிசாமி என்பவர் சிகிச்சை பலனின்றி கடந்த வியாழக்கிழமை உயிரிழந்தார். அவரது உறவினர்கள் திரண்டு, பணியில் இருந்த பெண் மருத்துவர், செவிலியரை தாக்கியதாக கூறப்படுகிறது.
இறந்துபோன பக்கிரிசாமியின் மகன் காவல் ஆய்வாளரான சண்முகசுந்தரம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புதுச்சேரியில் மருத்துவ ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இவர்களின் போராட்டத்துக்கு ஆதரவளிக்கும் வகையில், காரைக்கால் அரசு பொதுமருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாராத ஊழியர்கள் மருத்துவமனை வளாகத்தில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் கூறுகையில், மருத்துவமனையில் பல பணியிடங்களில் ஆள் பற்றாக்குறை நிலவுகிறது. பணியில் உள்ள ஊழியர்களுக்கு பணி சுமை ஏற்பட்டுள்ளது.
இந்த சூழலில் கரோனா தொற்றாளருக்கு சிகிச்சை அளித்தல் உள்ளிட்ட அர்ப்பணிப்புப் பணியை மருத்துவ ஊழியர்கள் செய்துவருகின்றனர். மருத்துவத் துறையினருக்கு மரியாதை தரவேண்டிய நிலையில், பணியில் உள்ளோரை தாக்குவது என்பது வன்மையான கண்டனத்துக்குரியது.
புகாருக்குள்ளான சண்முகசுந்தரம் மீது பிணையில் வெளிவரமுடியாத வகையில் வழக்குப் பதிவு செய்யப்படவேண்டும். ஆனால் கண்துடைப்பான நடவடிக்கை மட்டுமே எடுக்கப்பட்டுள்ளது.
காரைக்கால் மருத்துவமனை ஊழியர்கள், புதுச்சேரியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோருக்கு ஆதரவாக இப்போராட்டத்தை நடத்தியுள்ளோம். இந்த போராட்டத்தால் மருத்துவமனையில் நோயாளிகளுக்கான சேவையில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
புதுச்சேரி அரசு, மருத்துவத்துறையினருக்கு உரிய மரியாதை கிடைக்கும் வகையில் இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனர்.