திருப்பூர்: திருப்பூர் குமரனின் 117 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு குமரன் நினைவகத்தில் உள்ள அவரது சிலைக்கு கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
சுதந்திர போராட்ட வீரர் திருப்பூர் குமரனின் பிறந்த நாள் விழா ஒவ்வொரு ஆண்டும் திருப்பூர் ரயில் நிலையம் அருகில் உள்ள அவரது நினைவகத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன்படி திருப்பூர் குமரனின் 117 ஆவது பிறந்த நாள் விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.
இதில், அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த திருப்பூர் குமரனின் சிலைக்கு கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதைத்தொடர்ந்து, குமரன் நினைவகத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது வாழ்க்கை, வரலாறு தொடர்பான புகைப்படங்களையும் பார்வையிட்டார்.
இந்த விழாவில், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் சு.குணசேகரன்(திருப்பூர் தெற்கு), கே.என்.விஜயகுமார்(திருப்பூர் வடக்கு), உ.தனியரசு(காங்கயம்), மாநகர காவல் ஆணையர் ஜி.கார்த்திகேயன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திஷா மிட்டல், மாவட்ட வருவாய் அலுவலர் கு.சரவணமூர்த்தி, தெற்கு வட்டாட்சியர் சுந்தரம், திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் க.சிவகுமார், திருப்பூர் வருவாய் கோட்டாட்சியர் (பொ) ரவிகுமார், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில்குமார்,உதவி மக்கள் தொடர்பு அலுவலர் சு.பாலாஜி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.