நெய்வேலி: பண்ருட்டி நகராட்சி நிர்வாகம் குடிநீர் வசதி செய்து கொடுக்காததை கண்டித்து, அருந்ததியர் நகர் மக்கள் குடிநீர் தொட்டிக்கு மாலை அணிவித்து இறுதி சடங்கு செய்தனர்.
பண்ருட்டி நகரம், அருந்ததியர் நகரில் (போலீஸ் லைன்) 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் ஆழ்துளை கிணறு அமைத்து சின்டெக்ஸ் தொட்டி மூலம் குடிநீர் வசதி செய்யப்பட்டிருந்தது. இதில் இருந்த மின்மோட்டார் பழுதாகி கடந்த நான்கு மாதங்களாக குடி தண்ணீர் இல்லாமல் அப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
இதுகுறித்து பலமுறையிட்டும் நகராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை. இதனை கண்டித்து ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணியளவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை செயலர் எஸ்.சங்கர் தலைமையில், அப்பகுதி பெண்கள் குடிநீர் தொட்டிக்கு மாலை அணிவித்து இறுதி சடங்கு நடத்தினர்.
இந்நிகழ்ச்சியில் கட்சியின் நகரச் செயலர் ஆர்.உத்தராபதி, நகர குழு உறுப்பினர் ஜி.தினேஷ் , கிளை உறுப்பினர்கள் கே. அஜய், கே.குணா, ஜெ.ஞானரத்தினம், ஜி.அரி, ஆர்.கோகுல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.