மதுரையில் ரூ.5.60 கோடியில் கட்டப்பட்ட சேமிப்புக் கிடங்கு: முதல்வர் திறந்து வைத்தார்

5 கோடியே 60 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 2,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட இயந்திரங்களுடன் கூடிய சேமிப்புக் கிடங்கினை காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார். 
மதுரையில் ரூ.5.60 கோடியில் கட்டப்பட்ட சேமிப்புக் கிடங்கு: முதல்வர் திறந்து
மதுரையில் ரூ.5.60 கோடியில் கட்டப்பட்ட சேமிப்புக் கிடங்கு: முதல்வர் திறந்து

தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று தலைமைச் செயலகத்தில், வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் சார்பில் மதுரை மாவட்டம், மதுரை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் 5 கோடியே 60 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 2,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட இயந்திரங்களுடன் கூடிய சேமிப்புக் கிடங்கினை காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார். 

மேலும், 47 கோடியே 36 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வேளாண்மைத் துறை கட்டடங்களை திறந்து வைத்து, விவசாயிகளுக்கு குறைந்த வாடகையில் வேளாண் இயந்திரங்களை வழங்கிடும் வகையில் வேளாண்மைப் பொறியியல் துறையால் கொள்முதல் செய்யப்பட்ட 23 டிராக்டர்கள் மற்றும் 17 மண் அள்ளும் இயந்திர வாகனங்களையும் வழங்கினார்.

கிராமப்புற மக்களின் வாழ்வாதாரமாக விளங்குகின்ற வேளாண் தொழிலை மேம்படுத்திடவும், வேளாண் உற்பத்தி திறனில் உள்ள இடைவெளியை உரிய பண்ணை அணுகுமுறை மூலம் குறைத்து உணவுப் பயிர்கள் உற்பத்தியைப் பெருக்குவதற்கும், வேளாண் விளைபொருட்களின் அறுவடைக்குப்பிந்தைய பதப்படுத்தும் கட்டமைப்புகளை மேம்படுத்திடவும், சந்தையிணைப்பை வேறுபடுத்துவதன் மூலம் விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கச் செய்து அவர்களின் வருமானத்தைப் பலமடங்காக உயர்த்திடவும், தமிழகத்தில் இரண்டாம் பசுமைப் புரட்சியை ஏற்படுத்திடவும் தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் சார்பில் மின்னணு வர்த்தக சந்தை திட்டத்தின் கீழ், ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் நடைபெறும் வர்த்தகத்தினை மேம்படுத்திட மதுரை மாவட்டம், மதுரை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் 5 கோடியே 60 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 2,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட இயந்திரங்களுடன் கூடிய சேமிப்புக் கிடங்கினை தமிழக முதல்வர் பழனிசாமி இன்று காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்.

மேலும், விழுப்புரம் மாவட்டம் - விழுப்புரம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் 4 கோடியே 60 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 2,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட இயந்திரங்களுடன் கூடிய சேமிப்புக் கிடங்கு; நாமக்கல் மாவட்டம் - பரமத்தி வேலூர், விழுப்புரம் மாவட்டம் - திண்டிவனம் மற்றும் விக்கிரவாண்டி, கள்ளக்குறிச்சி மாவட்டம் - கள்ளக்குறிச்சி, கோயம்புத்தூர் மாவட்டம் - ஆனைமலை, திருப்பூர் மாவட்டம் - வெள்ளக்கோயில் ஆகிய இடங்களிலுள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் 16 கோடியே 74 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இயந்திரங்களுடன் கூடிய தரம்பிரிப்பு, மதிப்பீட்டு கூடங்கள், மின்னணு ஏலக்கூடங்கள் மற்றும் எடைமேடைகள்; மின்னணு தேசிய வேளாண்மை சந்தை திட்டத்தின் கீழ், விவசாயிகளின் சந்தை திறனை ஊக்குவிக்கும் வகையில், இராமநாதபுரம் மாவட்டம் - பரமக்குடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 3 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தலா 1000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 2 சேமிப்புக் கிடங்குகள், ஏலக்கூடம் மற்றும் விவசாயிகள் ஓய்வு அறை; திருப்பூர் மாவட்டம் - உடுமலைப்பேட்டை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 3 கோடியே 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 2000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட சேமிப்புக் கிடங்கு, ஏலக்கூடம் மற்றும் உலர்களம்; திண்டுக்கல் மாவட்டம் - திண்டுக்கல் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 2 கோடியே 85 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 2000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட சேமிப்புக் கிடங்கு, ஏலக்கூடம் மற்றும் உலர்களம்; வேலூர் மாவட்டம் - அம்மூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 1 கோடியே 73 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இயந்திரங்களுடன் கூடிய ஏலக்கூடம் மற்றும் கலவை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 76 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தரம்பிரிப்பு மற்றும் மதிப்பீட்டு கூடம், மின்னணு ஏலக்கூடம்; தேனி மாவட்டம் - கம்பம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 51 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மின்னணு ஏலக்கூடம் மற்றும் விவசாயிகள் ஓய்வு அறை; திருப்பூர் மாவட்டம் - திருப்பூர் மற்றும் பெதப்பம்பட்டி, கோயம்புத்தூர் மாவட்டம் - அன்னூர் ஆகிய இடங்களில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் 1 கோடியே 92 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மின்னணு ஏலக்கூடங்கள்; திருப்பூர் மாவட்டம் - திருப்பூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 1 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தலைமை அலுவலகக் கட்டடம்; திருநெல்வேலி மாவட்டம் - திசையன்விளை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 3 கோடியே 13 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்கள்; விருதுநகர் மாவட்டம் - விருதுநகர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அக்மார்க் ஆய்வகக் கட்டடம்;

புதுக்கோட்டை மாவட்டம் - அறந்தாங்கி, தருமபுரி மாவட்டம் - காரிமங்கலம் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டம் - ஸ்ரீபெரும்புதுhர் ஆகிய இடங்களில் 6 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மூன்று ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையங்கள்;

இந்திய – இஸ்ரேல் கூட்டு முயற்சிகள் மூலம் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் கீழ், திண்டுக்கல் மாவட்டம் - ரெட்டியார்சத்திரத்தில் கட்டப்பட்டுள்ள காய்கறி மகத்துவ மையத்தில் ஈராண்டு பட்டயப்படிப்பு பயிலும் மாணவிகளின் நலனுக்காக, சுமார் 50 மாணவிகள் தங்கிடும் வகையில், நவீன வசதிகளுடன் 65 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாணவியர் விடுதிக் கட்டடம்; என மொத்தம் 52 கோடியே 96 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வேளாண்மைத் துறை கட்டடங்களை முதல்வர் இன்று திறந்து வைத்தார்.

முதல்வர் கடந்த 16.7.2019 அன்று சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பில், “அதிக விலையுள்ள வேளாண் இயந்திரங்களை வாங்க இயலாத விவசாயிகளுக்கு உதவும் வகையில், இவ்வியந்திரங்கள் வேளாண் பொறியியல் துறை மூலம் குறைந்த வாடகைக்கு வழங்கப்படுகிறது. விவசாயிகள் பயன்படுத்துவதற்காக இத்தகைய இயந்திரங்களை வேளாண் பொறியியல் துறை மூலம் விலைக்கு வாங்க நிதி ஒதுக்கீடு செய்யப்படும்” என்று அறிவித்தார்.

அந்த அறிவிப்பிற்கிணங்க, அதிக விலையுள்ள வேளாண் இயந்திரங்களை வாங்க இயலாத விவசாயிகளுக்கு உதவும் வகையில், நவீன மற்றும் புதிய வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வேளாண்மைப் பொறியியல் துறை மூலமாக விலைக்கு வாங்கி விவசாயிகளுக்கு குறைந்த வாடகைக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை மூலமாக உருவாக்கப்பட்ட நீர்சேகரிப்பு கட்டுமானங்களை ஆழப்படுத்தி பராமரித்திடவும், நீர்வரத்து கால்வாய்களை சீரமைத்திடவும், நீர்வடிப்பகுதி வளர்ச்சி நிதியிலிருந்து 87 கோடியே 93 லட்சம் ரூபாய் செலவில் 50 டிராக்டர்கள், 4 மண் தள்ளும் புல்டோசர் இயந்திரங்கள், டிராக்டர்களுக்கான பண்ணைக் கருவிகள், 10 நெல் அறுவடை இயந்திரங்கள், 2 நெல் உலர்த்தும் இயந்திரங்கள், ஒரு கரும்பு அறுவடை இயந்திரம், 30 சோளம் அறுவடை இயந்திரங்கள், 32 பல்வகை தானியங்களை கதிரடிக்கும் இயந்திரங்கள், 20 டிரக்குடன் இயங்கக்கூடிய தேங்காய் பறிக்கும் இயந்திரங்கள், 17 மண் அள்ளும் இயந்திரங்கள், 10 பொக்லைன் போன்ற மண் அள்ளும் இயந்திரங்கள் உள்ளிட்ட 870 புதிய நவீன வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை விவசாயிகளுக்கு குறைந்த வாடகைக்கு வழங்கிடுவதற்காக, வேளாண்மைப் பொறியியல் துறைக்கு ஆணை வழங்கப்பட்டு, இவ்வியந்திரங்கள் கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், வேளாண்மைப் பொறியியல் துறையினால் 4 கோடியே 98 லட்சத்து 73 ஆயிரம் ரூபாய் செலவில் கொள்முதல் செய்யப்பட்ட 23 டிராக்டர்கள் மற்றும் 17 மண் அள்ளும் இயந்திர வாகனங்களை விவசாயிகளின் பயன்பாட்டிற்காக குறைந்த வாடகையில் வழங்கிடும் வகையில், தமிழக முதல்வர் இன்று அவ்வாகனங்களின் சாவிகளை 5 ஓட்டுநர்களிடம் வழங்கினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com