திண்டிவனம் அருகே பள்ளத்தில் கார் கவிழ்ந்ததில் தம்பதி பலியானார்கள்.
சென்னை, அயனாவரத்தைச் சேர்ந்தவர் ரயில்வே ஊழியர் தியாகேஸ்வரன்(59). இவரது மனைவி ஜெயா(55). இவரது மகன் இமானுவேல் (26). இவரது நண்பர் அதே பகுதியைச் சேர்ந்த சுனில் மகன் லிபன்(16). இவர்கள் நாகர்கோவில் துக்க நிகழ்ச்சியில் பங்கேற்க சென்னையில் இருந்து சனிக்கிழமை காரில் புறப்பட்டு சென்றனர். காரை சென்னை சேர்ந்த அயனாவரத்தைச் சேர்ந்த முருகன்(40) என்பவர் ஓட்டி சென்றார். பின்னர், ஞாயிற்றுக்கிழமை இரவு நாகர்கோவிலில் இருந்து மீண்டும் சென்னையிலிருந்து காரில் திரும்பிக் கொண்டிருந்தனர்.
இவர்களுடன் நாகர்கோவில் மாவட்டம், மருங்கூரைச் சேர்ந்த ஆனந்த்(38) என்பவரும் காரில் வந்துள்ளார். திங்கள்கிழமை அதிகாலை 2 மணி அளவில் விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே ஒலக்கூர் பகுதியில் சென்று கொண்டிருந்த போது முன்னால் சென்ற லாரி மீது கார் மோதியது. இதனால், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் இடதுபக்கம் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரில் இருந்த தியாகேஸ்வரன் மற்றும் ஜெயா ஆகியோர் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே பலியாகியனர்.
மேலும் காரில் இருந்த இமானுவேல், லிபன், ஆனந்த், முருகன் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். தகவலறிந்த ஒலக்கூர் காவல்துறையினர் நிகழ்விடத்துக்கு சென்று காயமடைந்தவர்களை மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், அங்கிருந்து அவர்கள் மேல்சிகிச்சைக்காக வெவ்வேறு மருத்துவமனைகளுக்கு அழைத்து செல்லப்பட்டனர். பின்னர் இறந்தந்தவர்களின் சடலங்களை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து தொடர்பாக ஒலக்கூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.