திருப்பூரில் சீட்டு நிறுவனம் நடத்தி ரூ.25 லட்சம் மோசடி செய்த நபரைத் தனிப்படையினர் புதன்கிழமை கைது செய்தனர்.
திருப்பூர் அம்மாபாளையம் எம்.ஜி.ஆர். நகர் 2ஆவது வீதியில் வசித்து வரும் அழகர் என்பவர் மாநகர காவல் ஆணையர் ஜி.கார்த்திகேயனிடம் கடந்த சில நாள்களுக்கு முன்பாக புகார் ஒன்றை அளித்துள்ளார்.
இதில், திருப்பூர், அம்மாபாளையம், பத்மாவதி நகரில் வசித்து வரும் கோபால்சாமி(59) என்பவரிடம் ஏலச்சீட்டு, தீபாவளி பண்டு சீட்டுக்காக ரூ.2.45 கட்டியுள்ளேன்.
மேலும், அம்மாபாளையம், திலகர் நகர், தண்ணீர்ப் பந்தல், அனுப்பர்பாளையம், பூண்டி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 250 நபர்கள் ரூ.25 லட்சம் வரையில் பணம் கட்டியிருந்தனர். ஆனால் அதன் பிறகு அவர் குடும்பத்தினருடன் தலைமறைவாகிவிட்டார். ஆகவே, உரிய விசாரணை நடத்தி எங்களது பணத்தை மீட்டுத்தர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதுதொடர்பாக மாநகர காவல் துணை ஆணையர் கே.சுரேஷ்குமார் உத்தரவின்பேரில் உதவி ஆணையர் க.பாலமுருகன் தலைமையில் காவல் ஆய்வாளர் கந்தசாமி,உதவி ஆய்வாளர்கள் வி.குணசேகரன், செல்வராஜ் ஆகியோரைக் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த தனிப்படையினர் நடத்தி விசாரணையில் கோபால்சாமி குமார் நகர் அருகே இருப்பதாக ரகசியத் தகவல் கிடைத்தது. இதன் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற தனிப்படையினர் கோபால்சாமியை புதன்கிழமை கைது செய்தனர்.