திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே மதுப் போதையில் மனைவியை அரிவாலாள் வெட்டி கொலை செய்த புகாரில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் மன்னார்குடி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கணவர், புதன்கிழமை அதிகாலை சிறை அறையின் ஜன்னல் கம்பியில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்ற வரை உடன் இருந்த கைதிகள் காப்பாற்றினர்.
மன்னார்குடி அடுத்த தென்பரை வடக்கு தெரு பாலுச்சாமி (65) மனைவி மாரியம்மாள் (57) தம்பதியருக்கு 4 மகள், ஒரு மகன் உள்ளனர். மகள்கள் அனைவருக்கும் திருமணம் ஆகி வெளியூரில் உள்ளனர். மகன் பிரபாகர் வெளிநாட்டில் தனியார் நிறுவனத்தில் வேலைப் பார்த்து வந்தவர் விடுமுறையில் ஊருக்கு வந்த நிலையில் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டதால் ஊரிலேயே இருந்து வருகிறார்.
பாலுச்சாமி குடிப்பழக்கத்திற்கு அடிமையாக இருந்ததால் அவரை மனைவியும் மகனும் கண்டித்து வந்தனர். இதனால், தினசரி தகராறு நடைபெற்று வந்தநிலையில், கடந்த 24 ஆம் தேதி அதே பகுதியில் மாரியம்மாள் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த போது, அங்கு குடிப்போதையில் வந்த பாலுச்சாமி தகராறில் ஈடுப்பட்டவர் திடீரென அரிவாளால் வெட்டியதில் மாரியம்மாள் உயிரிழந்தார். மனைவி இறந்த பயத்தில் வீட்டுக்குச் சென்ற பாலுச்சாமி விஷம் குடித்ததை அடுத்து அவரை மீட்டு மன்னார்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர், மறுநாள் மருத்துவமனையிலிருந்து தப்பியேடியவர், பின்னர் காவலர்களின் தேடுதலில் பிடிப்பட்டுள்ளார்.
மருத்துவமனை சிகிச்சை முடிந்து , மன்னார்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் செப்.29. ஆம் தேதி நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்ட பாலுச்சாமிக்கு 14 நாள்கள் நீதிமன்ற காவல் வழங்கி நீதிபதி உத்தரவு பிறப்பித்ததையடுத்து மன்னார்குடி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் , புதன்கிழமை சிறை அறையின் ஜன்னல் கம்பியில் துண்டு, லுங்கி ஆகியவற்றை இணைத்து தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்ற பாலுச்சாமியை , அதே அறையில் இருந்த வேறு இரண்டு கைதிகள் மீட்டு சிறைக்கண்காணிப்பாளர் அருள்ராஜ்-க்கு தகவல் தந்தனர்.
பின்னர், பாலுச்சாமியை சிறை காவலர்கள் பாதுகாப்புடன் வானத்தில் அழைத்து சென்று மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர். அங்கு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.