திருவள்ளூர்: திருவள்ளூர் பகுதியில் பல்வேறு திருட்டு மற்றும் கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய பட்டதாரி இளைஞரை செவ்வாப்பேட்டை காவல் நிலைய காவலர்கள் கைது செய்து, அவரிடம் இருந்து 53 சவரன் நகை, 2 மடிக்கணினிகள் மற்றும் 2 இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.
திருவள்ளூர் அருகே வேப்பம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் தொழிலதிபர் வெங்கடேசன்(41). இவரது வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 27 சவரன் நகை மற்றும் மடிக்கணினிகளையும் யாரோ மர்ம நபர்கள் பட்டப்பகலில் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி.அரவிந்தன் உத்தரவின்பேரில் காவல் துணைக்கண்காணிப்பாளர் துரைப்பாண்டியன் தலைமையில் 8 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு வேப்பம்பட்டு சோதனைச் சாவடியில் செவ்வாப்பேட்டை காவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்தவர் திடீரென வாகனத்தை திருப்பிக் கொண்டு தப்பியோட முயற்சித்தார். உடனே சுற்றி வளைத்து காவலர்கள் நடத்திய விசாரணையில் முன்னும், பின் முரணாக பேசியதால் சந்தேகம் அடைந்து விசாரணையை தீவிப்படுத்தினர். அப்போது, சென்னை எம்.எம்.டி.ஏ பகுதியைச் சேர்ந்த பாண்டியன் என்ற மாயகிருஷ்ணன்(29). இவர் அறிவியல் பட்டதாரி என்றும், சென்னை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பட்டப்பகலில் பூட்டியுள்ள வீடுகளை கண்காணித்து, உள்ளே புகுந்து ஒரு மணிநேரத்தில் திருடிவிட்டு தப்பிச்சென்று விடுவராம். இதேபோல், இவர் மீது 100க்கும் மேற்பட்ட திருட்டு மற்றும் கொள்ளை வழக்குகள் உள்ளது என்பதும் விசாரணையில் தெரிய வந்தது.
அதைத் தொடர்ந்து பிடிபட்ட பட்டாதாரி இளைஞரிடம் இருந்து 53 சவரன் நகை, 2 மடிக்கணினிகள், 2 இருசக்கர வாகனங்கள் ஆகியவைகளையும் காவலர்கள் புதன்கிழமை பறிமுதல் செய்தனர். மேலும், அவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்ததோடு, திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையிலும் அடைத்தனர்.