நாகையில், பாஜக அலுவலகத்தின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த பாஜகவினர் மின்வாரிய அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
நாகை, காடம்பாடி பகுதியில் பாஜக நாகை தெற்கு மாவட்ட அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்துக்கான மின் கட்டணம் கடந்த சில மாதங்களாகச் செலுத்தப்படவில்லை. இந்நிலையில் மின்சார வாரிய ஊழியர் ஒருவர் செவ்வாய்க்கிழமை மின் இணைப்புத் துண்டித்துள்ளார்.
இந்தத் தகவல் பாஜகவினருக்கு புதன்கிழமை தெரியவந்துள்ளது. இதையடுத்து பாஜக மாநிலச் செயலாளர் தங்க வரதராஜன், நாகை தெற்கு மாவட்டுத்தலைவர் நேதாஜி மற்றும் கட்சியினர் புதன்கிழமை மின்வாரிய அலுவலகத்துக்குச் சென்று அங்குப் பணியிலிருந்த அலுவலர்களுடன், மின் இணைப்பு துண்டிக்கான காரணம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால், அலுவலகப் பணிகள் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து, தமிழ்நாடு மின்சார வாரியம் உதவிப் பொறியாளர் அருண், பாஜகவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். மின்கட்டணத்தைக் காலதாமதமின்றி செலுத்துமாறு பாஜகவினரிடம் கேட்டுக்கொண்டார். தொடர்ந்து பாஜகவினர் முற்றுகையைக் கைவிட்டனர்.