விழுப்புரத்தில் விராட்டிகுப்பம் பாதை பகுதி மக்கள் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் சென்னை நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
விழுப்புரம் நகராட்சியின் 1வது வார்டு பகுதியான விராட்டிக்குப்பம் பாதையைச் சேர்ந்த, நான்கு தெருக்களைச் சேர்ந்த பொதுமக்கள், தங்கள் பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக சாலைகள் சீர் அமைக்கப்படாமல் உள்ளது, கழிவுநீர் வாய்க்கால் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படாததைக் கண்டித்து, சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், காட்பாடி ரயில்வே மேம்பாலம் அருகே புதன்கிழமை திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் ரேவதி தலைமையிலான காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடையே பேச்சுவார்த்தை நடத்தினர்.
தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை, வேனில் மாவட்ட ஆட்சியரகம் அழைத்துச் சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அங்கு நகராட்சி அதிகாரிகள் உறுதியளித்ததை அடுத்து மறியல் கைவிடப்பட்டது.
இந்த சாலை மறியலால் சென்னை நெடுஞ்சாலையில் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.