காஞ்சிபுரம் பணாமுடீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தைத் தனியார் ஆக்கிரமித்திருப்பதாகக் கிடைத்த புகாரின் பேரில் அந்த இடத்தை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு வியாழக்கிழமை மீட்டுள்ளனர்.
காஞ்சிபுரம் ஆலடிப்பிள்ளையார் கோயில் தெருவில் பணாமுடீஸ்வரர் திருக்கோயில் உள்ளது. இத்திருக்கோயிலுக்குச் சொந்தமான காலி இடம் காஞ்சிபுரத்தை அடுத்த ஓரிக்கையில் உள்ள மின்வாரிய துணை மின் நிலையத்துக்குப் பின்புறத்தில் அ மைந்துள்ளது. இந்த இடத்தை தனியார் ஆக்கிரமித்திருப்பதாக அறநிலையத்துறை அதிகாரிகளுக்குப் புகார்கள் வந்தன.
இப்புகாரின் அடிப்படையில் அக்கோயில் செயல் அலுவலர் ஆ.குமரன், திருக்கோயில் செயல் அலுவலர்கள் ந.தியாகராஜன், வெள்ளைச்சாமி, ஆலய நிலங்கள் பிரிவுக்கான வட்டாட்சியர் முருகன், கிராம நிர்வாக அலுவலர்கள் சத்தியமூர்த்தி, ராமதாஸ், நில அளவையர் சு.வடிவேலு ஆகியோர் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில் கோயில் நிலம் ஆக்கிரமித்திருப்பது தெரிய வந்ததைத் தொடர்ந்து ஜெ.சி.பி.இயந்திரத்தின் மூலம் சுற்றுச்சுவர்களை இடித்து மீட்டனர். கோயிலுக்குச் சொந்தமான இடம் எனப் பெயர்ப்பலகையும் வைத்து விட்டுத் திரும்பினர்.
இதுகுறித்து பணாமுடீஸ்வரர் கோயில் செயல் அலுவலர் ஆ.குமரன் கூறியது..
ஆக்கிரமிப்பு தொடர்பாக தொடர்ந்து புகார்கள் வந்ததால் இடத்தை ஆய்வு செய்து மீட்கப்பட்டுள்ளது. 6976 சதுர அடி இடமுள்ள கோயில் நிலத்தின் இன்றைய மதிப்பு ரூ.1.75 கோடியாகும். ஆக்கிரமிப்புகளை அகற்றும் போது சம்பந்தப்பட்ட இடத்தைச் சேர்ந்த சிலர் அதிகாரிகளை பணியைச் செய்யவிடாமல் தடுத்ததால் அவர்கள் மீது காவல்நிலையத்தில் புகார் செய்யவும் முடிவு செய்திருக்கிறோம் என்றார்.