சென்னை: நூறு நாள் வேலைத் திட்டம், தொகுப்பு வீடு உள்ளிட்ட திட்டங்களில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கில் தமிழக அரசு, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தாலுகா சாணாபுத்தூரைச் சேர்ந்த கே.விஜய் தாக்கல் செய்த மனுவில், திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி பேரூராட்சி சாணாபுத்தூர் கிராமத்தில் தொகுப்பு வீடு, கச்சா வீடு, கழிவறைகள் கட்டுவதிலும் மிகப்பெரிய அளவில் மோசடிகள் நடந்துள்ளது.
சாணாபுத்தூர் நகராட்சி செயலாளர் பிர்லா, நூறு நாள் வேலைத் திட்டம், கச்சா வீடு, தொகுப்பு வீடு திட்டங்களின் கீழ் போலி பயனாளிகள் பட்டியல் தயாரித்து அரசுக்கு அனுப்பி பணம் பெற்று மோசடி செய்துள்ளார்.
இதுதொடர்பாக, தமிழ்நாடு பஞ்சாயத்து மற்றும் கிராம வளர்ச்சித் துறை, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பிய புகார் மீது நடவடிக்கை எடுக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆர்.ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், பஞ்சாயத்து மற்றும் கிராம வளர்ச்சித்துறை செயலாளர், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர், நகர்புற வளர்ச்சி மற்றும் கிராம வளர்ச்சி துறை இயக்குநர், கும்மிடிப்பூண்டி நகராட்சி ஆணையர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.