ஈரோடு: ஈரோட்டில் இருசக்கர வாகனம் மீது கார் மோதியதில் அரசுப் பேருந்து ஓட்டுநர் உயிரிழந்தார்.
ஈரோடு மாவட்டம், சென்னிமலை மேற்கு தலவுமலை பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி மகன் ரமேஷ்(44). இவர் அரசுப் போக்குவரத்துக் கழக ஈரோடு கிளையில் ஓட்டுநராக பணியாற்றி வந்தார். இவர் சனிக்கிழமை இரவு பணி முடிந்து, இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
கஸ்பாபேட்டை வாய்க்கால் பாலம் அருகே சென்று கொண்டிருந்தபோது, பூந்துறையில் இருந்து ஈரோடு நோக்கி வந்த கார், ரமேஷ் ஓட்டிச்சென்ற இருசக்கர வாகனம் மீது மோதியது. அதன்பின்னும் அந்த கார் நிற்காமல் சாலையோரம் இருந்த மின் கம்பத்தில் மோதி நின்றது.
இந்த விபத்தில் படுகாயம் அடைந்த ரமேஷை அப்பகுதி மக்கள் மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ரமேஷ் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து ஈரோடு தாலுகா போலீஸார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான கார் ஓட்டுநரை தேடி வருகின்றனர். பலியான ரமேஷ்க்கு பேபி(40) என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.