தமிழக வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு, திடீர் உடல்நலக்குறைவு காரணமாக விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தாயார் இறந்த தகவல் அறிந்து, நேரில் நலம் விசாரிக்க தமிழக வேளாண் துறை அமைச்சர் ஆர்.துரைக்கண்ணு(71) செவ்வாய்க்கிழமை காலை சென்னையிலிருந்து சேலத்திற்கு காரில் சென்று கொண்டிருந்தார்.
காலை 10 மணி அளவில் திண்டிவனம் அருகே சென்றுகொண்டிருந்தபோது அமைச்சர் துரைக்கண்ணுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனே அவர் விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கத்திலுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவக் குழுவினர் முதலுதவி அவசர சிகிச்சை அளித்தனர். அரை மணி நேர சிகிச்சைக்கு பிறகு நெஞ்சுவலியில் இருந்து விடுபட்டு அவர் சகஜ நிலைக்குத் திரும்பினார்.
பின்னர், மேல்சிகிச்சைக்காக அவசர ஊர்தி மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். முன்னதாக, அமைச்சர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவலறிந்த விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை மற்றும் அதிகாரிகள் அரசு மருத்துவக்கல்லூரிக்கு நேரில் சென்று பார்வையிட்டனர்.
இதுகுறித்து மருத்துவக் கல்லூரி முதல்வர் குந்தவி தேவியிடம் கேட்டபோது, அமைச்சருக்கு லேசான நெஞ்சுவலி பாதிப்பு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதித்து, முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு சகஜ நிலைக்குத் திரும்பி உள்ளதாக தெரிவித்தார். மேலும், மேல் சிகிச்சைக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்படுவதாக அவர் கூறினார்.
முதல்வரின் தாயார் மறைவுக்கு அஞ்சலி செலுத்த சேலம் மாவட்டம் எடப்பாடி பகுதிக்கு காரில் சென்றபோது, அமைச்சர் துரைக்கண்ணுக்கு வழியில் விழுப்புரத்தில் உடல்நிலை பாதிக்கப்பட்டது.