ஊத்துக்கோட்டை அருகே சிறுவாபுரி முருகன் திருக்கோவில் சென்னை உள்ளிட்ட அண்டை மாவட்டங்களிலிருந்து ஏராளமானோர் சமூக இடைவெளியின்றி குவிந்ததால் கரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை அடுத்த சிறுவாபுரி கிராமத்தில் அருள்மிகு பாலசுப்பிரமணியர் சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. ஆறு செவ்வாய்க்கிழமைகளில் தொடர்ச்சியாக வந்து இங்கு வழிபாடு நடத்தினால் வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இன்று முருகனுக்கு உகந்த செவ்வாய்க்கிழமை என்பதால் சென்னை உள்ளிட்ட அண்டை மாவட்டங்களிலிருந்து ஏராளமானோர் சிறுவாபுரி முருகன் கோவிலில் குவிந்தனர்.
சமூக இடைவெளியின்றி பக்தர்கள் குவிந்ததால் கரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கோவில் நிர்வாகத்தின் அலட்சியத்தால் கோவிலுக்குள் காத்திருக்கும் மண்டபத்தில் தனிமனித இடைவெளி கடைப்பிடிக்கப்படாததால் கரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமைகளில் பக்தர்கள் அதிகளவில் வருவது வாடிக்கையாக இருந்து வரும் நிலையில் கோவில் நிர்வாகம் தனிமனித இடைவெளி பின்பற்றத் தரிசனம் மேற்கொள்ள போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யவில்லை எனப் பக்தர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாகக் காத்திருப்பதால் பக்தர்கள் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர். தனிமனித இடைவெளி கடைப்பிடிக்கப்படாததால் அருள் கிடைக்கிறதோ இல்லையோ, கரோனா கிடைப்பது நிச்சயம் எனவும் வேதனை தெரிவிக்கின்றனர் பக்தர்கள்.