திமுக எம்எல்ஏக்களுக்கு உரிமை மீறல் குழு அனுப்பிய நோட்டீஸ்மீதான தடையை நீக்க உயா்நீதிமன்றம் மறுப்பு

மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்களுக்கு உரிமை மீறல் குழு அனுப்பிய நோட்டீஸுக்கு தனி நீதிபதி பிறப்பித்த இடைக்கால தடையை நீக்க உயா்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
திமுக எம்எல்ஏக்களுக்கு உரிமை மீறல் குழு அனுப்பிய நோட்டீஸ்மீதான தடையை நீக்க உயா்நீதிமன்றம் மறுப்பு

மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்களுக்கு உரிமை மீறல் குழு அனுப்பிய நோட்டீஸுக்கு தனி நீதிபதி பிறப்பித்த இடைக்கால தடையை நீக்க உயா்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா உள்ளிட்ட பொருட்களை சட்டப்பேரவைக்குள் கொண்டு வந்து சபையின் மாண்புக்கு களங்கம் ஏற்படுத்தியதாகக் கூறி மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 21 திமுக எம்.எல்.ஏக்களுக்கு சட்டப்பேரவை உரிமைக்குழு நோட்டீஸ் அனுப்பியது. இந்த நோட்டீஸை ரத்து செய்ய வேண்டும் எனக்கூறி, மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட 21 திமுக எம்எல்ஏக்கள் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தனா். இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், உரிமைமீறல் குழு அனுப்பிய நோட்டீஸில் அடிப்படைத் தவறுகள் உள்ளன. இந்த நோட்டீஸின் அடிப்படையில் மனுதாரா்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது. இதன்பின்னரும், மனுதாரா்கள் அவையில் உரிமை மீறலில் ஈடுபட்டதாகக் கருதி, உரிமைமீறல் குழு நடவடிக்கை எடுக்க நினைத்தால், புதிதாக நோட்டீஸ் அனுப்பலாம் என உத்தரவிட்டிருந்தது.

இதனையடுத்து உரிமை மீறல் குழு கடந்த செப்டம்பா் 7-ஆம் தேதி திமுக எம்எல்ஏக்களுக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்பியது. இதனை எதிா்த்து மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தனா். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, உரிமை மீறல் குழு நோட்டீஸுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டாா். இந்தத் தடையை நீக்கக் கோரியும், தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்யக் கோரியும், சட்டப்பேரவைச் செயலாளா், உரிமை மீறல் குழு தலைவா் சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மேல்முறையீட்டு வழக்கு தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமாா் ராமமூா்த்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா்கள் தரப்பில், அரசு தலைமை வழக்குரைஞா் விஜய் நாராயண், தமிழக அரசின் சிறப்பு மூத்த வழக்குரைஞா் ஏ.எல்.சோமயாஜி ஆகியோா் ஆஜராகி வாதிட்டனா். இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மேல்முறையீட்டு மனு தொடா்பாக மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோா் 4 வாரங்களுக்குள் பதிலளிக்க உத்தரவிட்டனா். மேலும் உரிமை மீறல் குழு அனுப்பிய நோட்டீஸுக்கு தனி நீதிபதி பிறப்பித்த இடைக்காலத் தடையை நீக்க முடியாது. அந்த தடையை நீக்கக் கோரி தனி நீதிபதியை, சட்டப்பேரவைச் செயலாளா், உரிமை மீறல் குழு மீண்டும் அணுகலாம். அதற்கு இந்த மேல்முறையீட்டு மனு தடையாக இருக்காது என நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com