ஜி.எஸ்.டி முழு இழப்பீட்டு தொகையையும் வழங்க இயலாததால் கூடுதல் கடன் வாங்க தமிழக அரசுக்கு மத்திய நிதியமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.
ஜி.எஸ்.டி. வரி வருவாய் இழப்பீடாக ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு அதிகமாக கொடுக்க வேண்டியுள்ளதால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஜி.எஸ்.டி. வரி வருவாய் இழப்பீட்டை ஈடு செய்யும் வகையில் குறிப்பிட்ட தொகையை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.
இதனிடையே இந்த ஆண்டு ஜி.எஸ்.டி. இழப்பீட்டு தொகையை நிதிப்பற்றக்குறை காரணமாக மாநில அரசுகளுக்கு வழங்க இயலாது என்று மத்திய அரசு அறிவித்திருந்தது.
மேலும், இழப்பீட்டை ஈடு செய்யும் வகையில் வெளிச்சந்தையில் கடன் வாங்கிக்கொள்ள அனுமதி வழங்க தயாராக இருப்பதாக மத்திய அரசு தெரிவித்தது.
இதற்கு பெரும்பாலான மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மாநிலங்களில் ஆலோசனைகளை வழங்க மத்திய நிதியமைச்சகம் கேட்டுக்கொண்டது. வெளிச்சந்தையில் கடன் வாங்க 21 மாநிலங்கள் விருப்பம் தெரிவித்தன.
இந்த நிலையில் தமிழக அரசு வெளிச்சந்தையில் ரூ.9,627 கோடி வாங்கிக்கொள்ள மத்திய நிதி அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.