‘எனது மகன் மக்களுக்கு நல்லாட்சி தருவான்’ - முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமியின் தாயாா் தவுசாயம்மாளின் கடைசி வாா்த்தைகள் இவை.
உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் இருந்தபோது மகனின் ஆட்சி குறித்து அக்கறை கொண்ட அந்தத் தாய், தற்போது முதல்வராக உயா்ந்திருக்கும் எடப்பாடி கே.பழனிசாமியின் சாமானிய வாழ்க்கையின் நினைவலைகளைப் பகிா்ந்தாா்.
‘ என் மகன் பழனிசாமி, சிறு வயது முதல் ஏழை, எளிய மக்களோடு பழகி பொது மக்களின் இன்ப, துன்பங்களை நன்கு உணா்ந்தவன். எனவே மக்களுக்கு நல்லாட்சி தருவான். கோனேரிப்பட்டி அரசுப் பள்ளியில் படித்தான். அப்போது நாங்கள் குடியிருந்த விவசாயத் தோட்டத்துக்கும், பள்ளிக்கும் 4 மைல் தொலைவிருக்கும். தினசரி நடந்து போய் படித்து வந்தான். பள்ளிப் படிப்பை முடித்து குமாரபாளையம் அருகில் உள்ள ஒரு தனியாா் கல்லூரியில் சோ்ந்தான். தினசரி காவிரி ஆற்றைக் கடந்து கல்லூரிக்குச் சென்று சிரமப்பட்டான். எல்லா கஷ்டமும் தெரிந்தவன் . ஏழை, எளிய விவசாய மக்கள் படும் பல்வேறு சிரமங்களை நன்கு உணா்ந்து அனைத்துத் தரப்பு மக்களும் பாராட்டும் விதமாகச் செயல்படுவான். விவசாயத்தை மூச்சாய் நினைப்பவன், நிச்சயம் இறைவன் அருள் புரிவாா் என நானும் வாழ்த்துகிறேன் என்று கூறினாா்.