தென்காசியில் இருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த தனியார் சொகுசு பேருந்து ஒன்று விழுப்புரம் அருகே தென்பெண்ணை ஆற்று பாலம் மீது மோதி விபத்துக்குள்ளானதில் பேருந்து ஓட்டுநர் உள்பட் 12 பேர் காயமடைந்தனர்.
தென்காசியில் இருந்து தனியார் சொகுசு பேருந்து ஒன்று 34 பயணிகளுடன் செவ்வாய்க்கிழமை இரவு புறப்பட்டு சென்னை நோக்கி வந்துகொண்டிருந்தது.
இப்பேருந்து புதன்கிழமை அதிகாலை விழுப்புரம் அருகே பிடாகம் தென்பெண்ணை ஆற்று பாலத்தில் வந்தபோது, முன்னாள் அரியலூர் மாவட்டத்தில் இருந்து சென்னை நோக்கிச் சென்றுகொண்டிருந்த டாரஸ் லாரி மீது உரசி உள்ளது.
அப்போது பேருந்து ஓட்டுநர் இடதுபுறமாக திரும்பியதால் பாலத்தின் தடுப்பு சுவரில் மோதி பேருந்து விபத்துக்குள்ளானது.
இதில், நெல்லை மாவட்டம் களக்காடு பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர் செபஸ்டின் (36) உள்ளிட்ட 12 பேர் பலத்த காயமடைந்தனர்.
பேருந்தின் முன்பகுதி உடைந்து சேதமடைந்தன. விபத்து குறித்து தகவலறிந்து நெடுஞ்சாலை ரோந்து காவலர்கள் மற்றும் திருவெண்ணெய்நல்லூர் காவலர்கள் விரைந்து வந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டு விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பாலத்தில் சிக்கியிருந்த பேருந்தை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
இதனால் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.