மதுரை: நடிகை குஷ்பு மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கக் கோரி மதுரை ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலையத்தில் மாற்றுத்திறனாளிகள் அமைப்பினர் வியாழக்கிழமை புகார் அளித்தனர்.
காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய குஷ்பு அண்மையில் பாஜகவில் இணைந்தார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காங்கிரஸ் கட்சி மூளை வளர்ச்சியில்லாத கட்சி என விமர்சனம் செய்தார்.
இதையடுத்து தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான மதுரை மாவட்ட தலைவர் நாகராஜன் தலைமையில் நடிகை குஷ்பு மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கக் கோரி மதுரை ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.