ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக்க தடை விதிக்கக் கோரிய வழக்கு: நவ.10-ல் இறுதி விசாரணை

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக்க தடை விதிக்கக் கோரி ஜெ.தீபா தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு வழக்கை இறுதி விசாரணைக்காக வரும் நவம்பர் 10 ஆம் தேதிக்கு உயர்நீதிமன்றம் ஒத்த
(கோப்புப்படம்)
(கோப்புப்படம்)

சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக்க தடை விதிக்கக் கோரி ஜெ.தீபா தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு வழக்கை இறுதி விசாரணைக்காக வரும் நவம்பர் 10 ஆம் தேதிக்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில், தமிழக மறைந்த முதல்வரும் எனது அத்தையுமான ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் தமிழில் இயக்குநர் ஏ.எல்.விஜய் தலைவி என்ற பெயரிலும், ஹிந்தியில் ஜெயா என்ற பெயரில் ஹைதராபாத்தைச் சேர்ந்த விஷ்ணுவர்தன் இந்தூரி என்பவரும் திரைப்படமாக எடுத்து வருகின்றனர். 

இதேபோன்று ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை குயின் என்ற பெயரில் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இணையதளத் தொடராக எடுத்து வருகிறார். இந்த இணையதளத் தொடர் மற்றும் திரைப்படத்தை எடுப்பதற்கு முன்பாக ஜெயலலிதாவின் சட்டப்பூர்வ வாரிசான என்னிடம் அனுமதி எதுவும் பெறவில்லை. எனவே இந்த இணையதளத் தொடர் மற்றும் திரைப்படங்களுக்குத் தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தார். 

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற தனிநீதிபதி, இணையதளத் தொடர் மற்றும் திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி ஜெ.தீபா தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். 

இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்பையா, சி. சரவணன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தீபா தரப்பில், தலைவி திரைப்படத்தில் தன்னுடைய தந்தையை தவறாக சித்தரித்து காட்சிகள் இடம் பெற்றுள்ளது. எனவே அந்த திரைப்படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என வாதிடப்பட்டது.  தலைவி திரைப்பட படத் தயாரிப்பு நிறுவனத்தின் தரப்பில் இதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது. தலைவி படத்தின் கதையை முழுமையாக தெரிந்து கொள்ளாமல் தீபா பொய் குற்றச்சாட்டுகளை சுமத்துவதாக தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கை இறுதி விசாரணைக்காக வரும் நவம்பர் 10 மற்றும் 11 ஆம் தேதிகளுக்கு ஒத்திவைத்தனர். அந்த தினங்களில்  வழக்கு முழுமையாக விசாரித்து முடிக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com