அண்ணா பல்கலைக்கழகத்தைப் பிரித்து மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுசெல்ல துணை போகும் துணைவேந்தர் சூரப்பாவை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி சேலத்தில் திமுக இளைஞர் அணி மற்றும் மாணவர் அணியினர் சேலம் அரசினர் பொறியியல் கல்லூரி நுழைவாயில் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அண்ணா பல்கலைக்கழகத்தைப் பிரித்து மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு செல்வதைக் கண்டித்தும், 69 சதவீத இட ஒதுக்கீட்டைப் பிரிக்கும் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும் திமுக இளைஞர் அணி மற்றும் மாணவர் அணியினர் தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒருபகுதியாக சேலம் மத்திய மாவட்டம், சேலம் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டம் என மூன்று மாவட்டங்கள் ஒன்றிணைந்து சேலம் - ஓமலூர் தேசிய நெடுஞ்சாலையில் கருப்பூர் பகுதியில் அமைந்துள்ள அரசினர் பொறியியல் கல்லூரி நுழைவுவாயில் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திமுக இளைஞரணி மாநில துணைச் செயலாளர் தமிழரசன் தலைமையில் இளைஞர் அணி மற்றும் மாணவர் அணியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்று அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவை கண்டித்தும், அவரை பதவி நீக்கிட வலியுறுத்தியும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.
மேலும், மாணவர்கள் நலனைப் பாதிக்கும் வகையில் இட ஒதுக்கீட்டை பிரிக்கக்கூடாது, அண்ணா பல்கலைக்கழகத்தை மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு செல்லக்கூடாது என்பன போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்திருந்தனர். இந்த நிலையில் அனுமதியை மீறி ஆர்ப்பாட்டம் நடைபெற்றதால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட உள்ளது.