அண்ணா பல்கலை. துணைவேந்தர் சூரப்பாவை பதவி நீக்கம் செய்யக்கோரி விழுப்புரம் அண்ணா அரசு பொறியியல் கல்லூரி முன்பு திமுக மாணவரணி, இளைஞரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
அண்ணா பல்கலைக்கழகத்தை தரம் உயர்த்துவதாகக்கூறி அதனை மத்திய அரசு கையகப்படுத்துவதை எதிர்த்தும், அதற்கு துணைபோகின்ற பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும், விழுப்புரம் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி முன்பாக திமுக மாணவரணி மற்றும் இளைஞர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் பொன். கொளதமசிகாமணி, விழுப்புரம் மாவட்டச் செயலாளர் நா.புகழேந்தி, இளைஞரணி அமைப்பாளர் தினகரன், மாணவரணி அமைப்பாளர் வினோத் உள்ளிட்டோர் தலைமையில் 300-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், துணைவேந்தர் சூரப்பாவை டிஸ்மிஸ் செய்யக்கோரியும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.