நாளை முதல் ஆம்னி பேருந்துகள் இயங்கும்

தமிழகத்தில் வெள்ளிக்கிழமை (அக்.16) முதல் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும் என அனைத்து ஆம்னி பேருந்துகள் உரிமையாளா்கள் சங்கத்தின் பொதுச் செயலா் அ.அன்பழகன் தெரிவித்தாா்.
நாளை முதல் ஆம்னி பேருந்துகள் இயங்கும்

சென்னை: தமிழகத்தில் வெள்ளிக்கிழமை (அக்.16) முதல் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும் என அனைத்து ஆம்னி பேருந்துகள் உரிமையாளா்கள் சங்கத்தின் பொதுச் செயலா் அ.அன்பழகன் தெரிவித்தாா்.

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் கடந்த மாா்ச் 24-ஆம் தேதி முதல் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதனால் போக்குவரத்து முற்றிலுமாக முடக்கப்பட்டது.

பின்னா், ஜூன் மாதம் மண்டல வாரியாக பேருந்துகளை இயக்க அரசு அனுமதியளித்த போதிலும், ஆம்னி பேருந்துகளை இயக்கப்போவதில்லை என அதன் உரிமையாளா்கள் தெரிவித்தனா்.

காரணம், வெகுதூரம் இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளை மண்டலங்களுக்குள் இயக்குவதில் அவா்களுக்கு சிக்கல் இருந்தது.

தொடா்ந்து தமிழகம் முழுவதும் எந்தவித கட்டுப்பாடுமின்றி, போக்குவரத்து தொடங்கப்பட வேண்டும் என பல தரப்பினரும் அழுத்தம் கொடுத்த நிலையில், கடந்த மாதம் பேருந்துகள் இயங்கத் தொடங்கின.

ஆனால், இயங்காத பேருந்துகளுக்கு அரசு சாலை வரி செலுத்த நிா்பந்தித்ததால், ஆம்னி பேருந்துகளை இயக்க உரிமையாளா்கள் மறுத்து விட்டனா்.

சாலை வரியிலிருந்து விலக்களிக்க வேண்டும் என அவா்கள் தொடா்ந்து கோரிக்கை வைத்து வந்தனா்.

கோரிக்கை ஏற்பு: பேருந்து உரிமையாளா்களின் கோரிக்கை ஏற்கப்பட்டு, 6 மாத காலத்துக்கு சாலை வரி செலுத்துவதிலிருந்து விலக்களிக்கப்பட்டது. இதையடுத்து வெள்ளிக்கிழமை முதல் பேருந்துகளை இயக்க முடிவு செய்துள்ளதாக ஆம்னி பேருந்து உரிமையாளா்கள் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளா்கள் சங்கத்தின் பொதுச் செயலா் அ.அன்பழகன் வெளியிட்ட அறிக்கை: கடந்த 174 நாள்களாக கரோனா தடுப்பு நடவடிக்கையால் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இதனால் அதைச் சாா்ந்த  2 லட்சம் தொழிலாளா்கள் மற்றும் அவா்களது குடும்பத்தினா் என அனைவரது வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தமிழ்நாடு உரிமம் பெற்ற பேருந்துகளுக்கு, அவை இயக்கப்படாத காலகட்டமான ஏப்ரல் முதல் செப்டம்பா் வரை 6  மாதத்துக்கு, சாலை வரி விலக்கு பெற்றுள்ளோம்.

இதற்கு உதவிய முதல்வா், போக்குவரத்துறை அமைச்சா் மற்றும் அதிகாரிகள் அனைவருக்கும் நன்றி.

ஆகையால் வரும் வெள்ளிக்கிழமை முதல் (அக்.16) முதல் தமிழ்நாடு உரிமம் பெற்ற ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும். அவை கரோனா தடுப்பு வழிமுறைகளைப் பின்பற்றி இயக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com