தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தற்போது சாத்தியமில்லை: அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்

தமிழகத்தில் பள்ளிகளைத் திறப்பதற்கான சாத்தியக்கூறுகள் தற்போது இல்லை என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.
அமைச்சர் செங்கோட்டையன்
அமைச்சர் செங்கோட்டையன்

தருமபுரி: தமிழகத்தில் பள்ளிகளைத் திறப்பதற்கான சாத்தியக்கூறுகள் தற்போது இல்லை என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களிலுள்ள தனியார் பள்ளிகளுக்கு தொடர் அங்கீகார ஆணை வழங்கும் விழா தருமபுரியில் புதன்கிழமை நடைபெற்றது. 
அதில் பங்கேற்ற பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 

கரோனா பரவலால் நிலவிவரும் நெருக்கடியான சூழலில், தொற்றுப் பரவலைத் தடுக்கும் பணியில், தமிழக அரசு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. மாநிலத்தில் புதிய தொழில்கள் தொடங்குவதற்கான சூழலையும் தமிழக அரசு உருவாக்கியுள்ளது. தமிழக அரசின் இத்தகைய பணிகளை, பிரதமர் நரேந்திர மோடியும் பாராட்டி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பள்ளிக்கல்வியை முடித்து, 49.8 சதவீதம் பேர் உயர்கல்வி பயில்கின்றனர். இதில், இந்திய அளவில் முதன்மையான மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. அரசுப் பள்ளிகளில் விரைவில் 7,700 ஸ்மார்ட் வகுப்பறைகள், கரும்பலகைகள் இல்லாத 80, 000 வகுப்பறைகள், 923 ஆய்வுக் கூடங்களை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். கரோனா பொதுமுடக்கத்திலும், மாணவர்களுக்கு தங்கு, தடையின்றி தொலைக்காட்சி வழியாக 60 சதவீத பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. 

மேலும், உதவி எண் மூலம் மாணவ மாணவியரின் சந்தேகங்கள் நிவர்த்தி செய்யப்படுகின்றன. 

ஆந்திர மாநிலத்தில், அண்மையில் அவசர கதியில் பள்ளிகள் திறந்ததால் அங்கு 26 மாணவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். எனவே, மாணவர்களின் நலன் கருதி, கரோனா பரவல் முற்றிலும் குறைந்த பிறகு, பள்ளிக்கல்வித் துறை, உயர்கல்வித் துறை, உள்ளாட்சித் துறை, சுகாதாரத் துறை ஆகிய நான்கு துறைகளும் கலந்தாலோசனை மேற்கொண்ட பிறகு பள்ளிகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, தமிழகத்தில் தற்போதைக்கு பள்ளிகள் திறப்பதற்கான சாத்தியக் கூறுகள் இல்லை. 

கடந்த 2013}ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் தேர்ச்சிச் சான்றுக்கு ஏழு ஆண்டுகள் நிறைவுற்றதால், அவர்களுக்கு பணி வழங்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்தக் கால அளவானது மத்திய அரசு நிர்ணயித்ததாகும். எனவே, இது தொடர்பாக மத்திய அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

மாநில உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் சி.வி.ராஜேந்திரன் (பர்கூர்), ஆ.கோவிந்தசாமி (பாப்பிரெட்டிப்பட்டி), பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றியத் தலைவர் டி.ஆர்.அன்பழகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com