நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் பற்றி ஸ்டாலின் குற்றச்சாட்டு: அமைச்சர் ஆர்.காமராஜ் மறுப்பு

விவசாயிகள் கொண்டுவரும் நெல் முழுவதையும் கொள்முதல் செய்ய அதிகாரிகள் மறுக்கிறார்கள் என்பதில் உண்மை இல்லை என்று உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் காமராஜ்
அமைச்சர் காமராஜ்

விவசாயிகள் கொண்டுவரும் நெல் முழுவதையும் கொள்முதல் செய்ய அதிகாரிகள் மறுக்கிறார்கள் என்பதில் உண்மை இல்லை என்று உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில், விவசாயிகளின் நலனில் மிகுந்த அக்கறை கொண்டுள்ள அம்மாவின் அரசு, முதல்வரின் உத்தரவின்படி, கடந்த 2019-2020 கொள்முதல் பருவத்தில் 2135 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து, 1.10.2019 முதல் 30.9.2020 முடிய 32.41 இலட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்துள்ளது. பொதுவாக 1500 கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும் நிலையில், 2019-2020 பருவத்தில் வரலாறு காணாத வகையில் 2135 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டன. இதன் மூலம் விவசாயிகளுக்கு மாநில அரசு வழங்கும் ஊக்கத் தொகை ரூ.205 கோடி சேர்த்து மொத்தம் ரூ.6,130 கோடி சம்பந்தப்பட்ட விவசாயிகளின் வங்கி கணக்கில் கொள்முதல் செய்யப்பட்டவுடன் நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது. இதனால் 5,85,241 விவசாயிகள் பயனடைந்துள்ளனர். தமிழ்நாடு வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவிற்கு அதிகபட்ச கொள்முதல் செய்து அம்மாவின் அரசு சாதனை படைத்துள்ளது. கடந்த 2011-2012 கொள்முதல் பருவத்தில் 23.87 இலட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டதே அதிகபட்ச அளவாக இருந்தது. ஊரடங்கு காலத்திலும் தமிழ்நாட்டில் எந்த ஒரு விவசாயியும் பாதிக்கப்படக்கூடாது என்ற நோக்கில் அம்மாவின் அரசு கரோனா தொற்று ஏற்படாத வகையில் சிறந்த பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி, தேவைக்கேற்ப கொள்முதல் நிலையங்களை தொடங்கி, கொள்முதல் நிலையத்திற்கு வரும் அனைத்து விவசாயிகளிடம் இருந்து ஊரடங்கு காலத்தில் மட்டும் 12.77 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்தது. 

இதன் மூலம் மொத்தம் 2416.05 கோடி ரூபாய் சம்பந்தப்பட்ட விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது. இந்த கொள்முதல் மூலம் 2,47,518 விவசாயிகள்பயனடைந்துள்ளனர். முதல்வரின் உத்தரவின்படி, இந்த ஆண்டு ஜூன் 12-ம் தேதி அன்று மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்கு நீர் திறந்துவிடப்பட்டதாலும், பருவ மழை நல்ல முறையில் பெய்ததாலும், தேவையான இடுபொருட்கள் உள்ளிட்ட பொருட்கள் தட்டுப்பாடின்றி விவசாயிகளுக்குக் கிடைக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாலும், கடைமடை வரை மழைக்காலத்திற்கு முன்பே வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டதாலும், தமிழ்நாடெங்கும் விவசாயிகளால் அதிக அளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டு, நெல் விளைச்சல் அமோகமாக உயர்ந்துள்ளது. குறுவை பருவத்திற்கான நெல்லை கொள்முதல் செய்ய, அறுவடை கால தொடக்கத்திலேயே, அதாவது 1.10.2020 அன்றே, 591 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, கொள்முதல் பணி துவங்கப்பட்டது. மேலும், அனைத்து டெல்டா மாவட்டங்களிலும் மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களிலும் விவசாயிகளின் கோரிக்கைகளின் அடிப்படையில் தேவையான எண்ணிக்கையில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர்களால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, நாளது தேதி வரையில் 816 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இயங்கி வருகின்றன. கடந்த 4.10.2020 மற்றும் 11.10.2020 ஆகிய இரண்டு ஞாயிறு விடுமுறை நாட்களிலும் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, நெல் கொள்முதல் பணி நடைபெற்றது. 

இப்பருவத்தில் 1.10.2020 முதல் இதுவரை, 1.55 இலட்சம் மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இந்த கொள்முதல் அளவானது குறுவை பயிர் கொள்முதல் காலத்தில் செய்யப்பட்ட அதிகபட்ச கொள்முதல் அளவாகும். ஒரு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நாள் ஒன்றிற்கு அதிகபட்சமாக 1000 மூட்டைகள் மட்டுமே கொள்முதல் செய்ய முடியும் என்பதால், நெல் வரத்து கூடுதலாக இருக்கும் இடங்களில், கூடுதலாக ஒரு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கவும் மாவட்ட ஆட்சித்தலைவர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளின் நெல்லை எவ்விதி உச்ச வரம்பின்றி முழுமையாக கொள்முதல் செய்யப்பட்டு வரும் நிலையில், “விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை முழுவதையும் கொள்முதல் செய்ய அரசு அதிகாரிகள் மறுக்கிறார்கள்” என எதிர்கட்சித் தலைவர் கூறுவது உண்மைக்கு புறம்பானது. மேலும், மாண்புமிகு எதிர்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின், “கொள்ளிடம் பகுதியில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் நிறுத்தப்பட்டதால், 50,000 நெல் மூட்டைகள் சேதம்” என்று கூறியிருக்கிறார். ஆனால், கொள்ளிடம் பகுதியில் இந்த கொள்முதல் பருவத்தில் 28 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, இதுவரை 7,037 மெட்ரிக் டன் நெல் (1,75,925 நெல் மூட்டைகள்) கொள்முதல் செய்யப்பட்டு, தொடர்ந்து கொள்முதல் பணி நடைபெற்று வருகிறது. 

தற்போது, 1.10.2020 அன்று துவங்கியுள்ள 2020-2021 கொள்முதல் பருவத்திற்கு குறைந்தபட்ச ஆதார விலை குவிண்டால் ஒன்றுக்கு சன்னரகத்திற்கு ரூ.1835/- லிருந்து ரூ.1888/- ஆகவும் மற்றும் சாதாரண ரகத்திற்கு ரூ.1815/- லிருந்து ரூ.1868/- ஆகவும் உயர்த்தி மத்திய அரசு ஆணையிட்டுள்ளது. இத்துடன் மாநில அரசின் ஊக்கத் தொகையாக குவிண்டால் ஒன்றுக்கு சன்னரகத்திற்கு ரூ.70/- மற்றும் சாதாரண ரகத்திற்கு ரூ.50/- வழங்கி மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். இதன்படி அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் நெல்லிற்கு குவிண்டால் ஒன்றுக்கு சன்ன ரகத்திற்கு ரூ.1958/- மற்றும் சாதாரண ரகத்திற்கு ரூ.1918/- வழங்கப்பட்டு வருகிறது. மின்னணு கொள்முதல் முறையில் விவசாயிகளுக்கு உடனுக்குடன் அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாக தொகை செலுத்தப்படுவதாலும், கூடுதலாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளதாலும், சென்ற ஆண்டை விட கூடுதலாக கொள்முதல் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாலும், விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல்லினை தனியாரிடம் விற்பனை செய்வதை தவிர்த்து, அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலேயே விற்பனை செய்ய அதிக அளவில் முன்வருகின்றனர்.

அம்மாவின் வழியில் ஆட்சி செய்து வரும் முதல்வர் விவசாயிகளின் நலனுக்காக மேற்கூறிய நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிட்டதன் காரணமாக, விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல்லினை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்து அதற்கான தொகையினை உடனுக்குடன் பெற்றுக் கொண்டு மகிழ்ச்சியுடனும், மனநிறைவுடனும் உள்ளனர். நெல் கொள்முதல் உண்மை நிலவரங்கள் இவ்வாறாக இருக்க, கள நிலவரங்கள் பற்றி ஏதும் அறியாமல், விவசாய பொதுமக்களிடம் மாண்புமிகு அம்மாவின் அரசு பெற்று வரும் நற்பெயர் கண்டு பொறுக்க முடியாமல், எதிர்கட்சித் தலைவர் குறை கூறிவருவது அவரது அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக அவர் விடுக்கும் அறிக்கை மட்டுமே என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com