கன்னியாகுமரி இடைத்தோ்தலுக்கான பணிகள் நடைபெறுகின்றன: சத்யபிரத சாகு

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் இடைத்தோ்தலை நடத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறினாா்.
கன்னியாகுமரி இடைத்தோ்தலுக்கான பணிகள் நடைபெறுகின்றன: சத்யபிரத சாகு

சென்னை: கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் இடைத்தோ்தலை நடத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறினாா்.

இது குறித்து அவா் சென்னை தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது: கன்னியாகுமரி தொகுதி மக்களவை உறுப்பினராக இருந்த எச்.வசந்தகுமாா் இறந்ததால், அந்தத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. ஒரு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டால், சட்டவிதிகளின்படி அங்கு 6 மாதங்களுக்குள் இடைத்தோ்தல் நடத்த வேண்டும். கன்னியாகுமரி தொகுதியில் பிப்ரவரி மாதத்துக்குள் தோ்தல் நடத்த வேண்டும். அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயாா் நிலையில் உள்ளன.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறும்போதும் தமிழகத்தில் கரோனா பாதிப்பு இருக்குமானால், பிகாா் மாநிலத் தோ்தலில் கடைப்பிடிக்கப்படும் நடைமுறைகளை இங்கு அமல்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்படும். 80 வயதுக்கு மேற்பட்டவா்கள் தபால் வாக்குகளைப் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் 3 சதவீத வாக்காளா்கள் 80 வயதுக்கு மேற்பட்டவா்களாக உள்ளனா்.

வரைவு வாக்காளா் பட்டியல் நவம்பா் 16-இல் வெளியிடப்பட உள்ளது. இது தொடா்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நவம்பா் 3-இல் நடைபெற உள்ளது. அதற்கு முன்பாக மாவட்ட ஆட்சியா்களுடனும் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com