நாமக்கல்: நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காணொலி முறையில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கரோனா நோய்த்தொற்று பரவல், பொது முடக்கம் போன்றவற்றால் கடந்த ஆறு மாதங்களாக மாதாந்திர விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறவில்லை. இதனால் தங்களுடைய பிரச்னைகளையும், குறைகளையும் தெரிவிக்க முடியாமல் விவசாயிகள் சிரமப்பட்டு வந்தனர்.
குறைதீர் கூட்டத்தை உடனடியாக நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
அதனடிப்படையில் வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் ஒரு மணி வரை காணொளி வாயிலாக விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 15 வட்டார வேளாண் உதவி இயக்குநர் அலுவலகங்களில் இருந்தபடி, விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள், மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜிடம் தங்களது குறைகளை தெரிவித்தனர்.
ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இருந்தபடி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.
இந்த கூட்டத்தில் மரவள்ளிக் கிழங்குக்கு விலை நிர்ணயிப்பது தொடர்பான முத்தரப்பு கூட்டத்திற்கு ஆட்சியர் ஏற்பாடு செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.