மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் நவராத்திரி விழா வெள்ளிக்கிழமை துவங்கியது.
தற்சமயம் நோய் தொற்று பரவாமல் இருக்க அரசின் வழிகாட்டுதலின்படி முகக் கவசம் சமூக இடைவெளி மானிட்டர் மூலம் கை கழுவுதல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க நிர்வாகிகள் பக்தர்களுக்காக செய்துள்ளனர். அவ்வாறு வருகின்ற பக்தர்கள் மட்டுமே அம்மன் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்துள்ளனர்.
நவராத்திரி விழா வெள்ளிக்கிழமை அதிகாலை அம்மனுக்குச் சிறப்பு அபிஷேக ஆராதனைகளுடன் விழா நிகழ்ச்சிகள் தொடங்கியது. மதியம் 12:40 பங்காரு அடிகளார் அகண்ட தீபத்தை ஏற்றி வைத்தார். தொடர்ந்து புரட்டாசி அமாவாசை வேள்வி பூஜையைத் துவக்கி வைத்தார். ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத் தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் முன்னிலை வகித்தார்.
தொடர்ந்து வருகிற 26ஆம் தேதி வரை நவராத்திரி விழா நடைபெறுகிறது. லட்சார்ச்சனை தினமும் நடைபெற உள்ளது. சிறப்பு அம்சமாக நவராத்திரி கொலு சித்தர் பீட வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகளை ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத் தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் தலைமையில் இயக்க துணைத் தலைவர்கள் ஸ்ரீதேவி ரமேஷ் கோபா செந்தில்குமார் ஆகியோர் தலைமையில் அனைத்து மாவட்ட ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க நிர்வாகிகள் செய்துள்ளனர்.