சென்னை: தனது தேர்தல் வெற்றியைச் செல்லாது என அறிவிக்கக் கோரி வாக்காளர் தொடர்ந்துள்ள வழக்கை நிராகரிக்கக் கோரி தேனி மக்களவை உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத் குமார் தொடர்ந்த வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் தேனி தொகுதி வாக்காளர் மிலானி தாக்கல் செய்த தேர்தல் வழக்கு மனுவில், தமிழகத்தில் கடந்த 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் தேனி மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஓ.பி.ரவீந்திரநாத் குமார், வாக்காளர்களுக்குப் பணப்பட்டுவாடா, அதிகார துஷ்பிரயோகம், உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் செய்து வெற்றி பெற்றுள்ளார். எனவே அவரது தேர்தல் வெற்றியைச் செல்லாது என அறிவிக்க வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன் விசாரணையில் இருந்து வருகிறது. இந்த வழக்கை நிராகரிக்கக் கோரி ஓ.பி.ரவீந்திரநாத் குமார் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், தொகுதி வாக்காளர் என்ற அடிப்படையில் மிலானி என்பவர் தொடர்ந்துள்ள இந்த வழக்கு செல்லத்தக்கது அல்ல. மேலும் தேர்தல் வழக்குத் தொடர்வதற்கான உரிய வழிமுறைகளை கடைபிடிக்காமல் இந்த வழக்குத் தொடரப்பட்டுள்ளது. எனவே இந்த வழக்கை நிராகரிக்க வேண்டும் என கோரியிருந்தார். இந்த வழக்கு தீர்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன் விசாரணைக்கு வந்தது. ரவீந்திரநாத்க்கு எதிரான குற்றச்சாட்டுக்கு ஆரம்பகட்ட முகாந்திரம் உள்ளது. எனவே தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி அதிமுக மக்களவை உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத் குமார் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். ரவீந்திரநாத்துக்கு எதிரான தேர்தல் வழக்கு தொடர்ந்து நடைபெறும் என நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.