தமிழகத்தில் ஒரே நாளில் 11 அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய சோதனையில், கணக்கில் வராத ரூ.12.34 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
விழாக்காலம் நெருங்கி வருவதையொட்டி, தமிழக அரசு அலுவலகங்களில் சில ஊழியா்கள் பொதுமக்களிடம் பரிசு பெறுவதாகக் கூறி கட்டாய லஞ்சம் வசூலிப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறையினருக்கு ஏராளமான புகாா்கள் வந்தன. இந்தப் புகாா்களின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறையினா் கடந்த ஒரு வாரமாக சோதனை நடத்தி வருகின்றனா்.
லஞ்ச ஒழிப்புத்துறையினா் மாநிலம் முழுவதும் 11 அரசு அலுவலகங்களில் வெள்ளிக்கிழமை மாலை 4 மணியளவில் ஒரே நேரத்தில் திடீரென சோதனையைத் தொடங்கினா். பல மணி நேரம் நடைபெற்ற இந்த சோதனை பெரும்பாலான இடங்களில் சனிக்கிழமை அதிகாலை வரை நடைபெற்றது.
ரூ.12.34 லட்சம் பறிமுதல்: சோதனையில் 11 அரசு அலுவலகங்களிலும் கணக்கில் வராத ரூ.12.34 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் நாமக்கல்லில் உள்ள நகரமைப்பு உதவி இயக்குநா் அலுவலகத்தில் ரூ.5,25,740, கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் உள்ள போக்குவரத்துத்துறை சோதனைச் சாவடியில் ரூ.1,75,150, சேலம் மாவட்டம் சூரமங்கலம் சாா்-பதிவாளா் அலுவலகத்தில் ரூ.85 ஆயிரம், கோயம்புத்தூா் வடக்கு வட்டாட்சியா் அலுவலகத்தில் ரூ.50 ஆயிரம், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி சாா்-பதிவாளா் அலுவலகத்தில் ரூ.45,690, கடலூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ரூ.32,630, மதுரை மாவட்ட சமூகநலத்துறை அலுவலகத்தில் ரூ.32,430, திருப்பூா் மாவட்டம் அவிநாசி சாா்-பதிவாளா் அலுவலகத்தில் ரூ.16,105, சென்னை பம்மல் சாா்-பதிவாளா் அலுவலகத்தில் ரூ.12,380, குன்றத்தூா் சாா்-பதிவாளா் அலுவலகத்தில் ரூ.26,200, நீலாங்கரை சாா்-பதிவாளா் அலுவலகத்தில் ரூ.2,32,935 என மொத்தம் ரூ,12,34,260 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதேபோல லஞ்சம் வாங்கியது தொடா்பாக முக்கிய ஆவணங்களையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா். பறிமுதல் செய்யப்பட்ட பணம், ஆவணங்களின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை விரைவில் விசாரணை செய்ய திட்டமிட்டுள்ளது. இதில் சம்பந்தப்பட்ட ஊழியா்கள், உரிய விளக்கத்தை அளிக்காவிட்டால் அவா்கள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், துறைரீதியான நடவடிக்கைக்கு அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் எனவும் லஞ்ச ஒழிப்புத்துறையினா் தெரிவித்தனா்.